மகாதமனிகளில் சுருக்கம் ஏற்படுவது ஏன்?
கே.கந்தசாமி, மதுரை: எனக்கு மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. சிறிது தூரம் நடந்தாலோ, சில நேரம் ஓய்வு எடுக்கும்போதோ, திடீரென படபடப்பு சில நிமிடங்கள் தொடர்கிறது. இதற்கென்ன காரணம்?சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படபடப்பு ஏற்படுவது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதே. எனவே, முதலில் நீங்கள் படபடப்பு ஏற்படும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறிவது முக்கியம். ரத்தத்தில் சரியான அளவில் சர்க்கரை இருந்தாலும், உங்களுக்கு அவசியம் இ.சி.ஜி., டிரெட் மில் மற்றும் எக்கோ பரிசோதனைகள் தேவைப்படும்.இதில் இதயத்தின் மின்னோட்டத்திலோ, ரத்த ஓட்டத்திலோ, வால்வு கோளாறு, தசையில் கோளாறு ஏற்பட்டாலோ எளிதில் கண்டறியலாம். இந்த பரிசோதனைகளின் முடிவில், எதனால் படபடப்பு ஏற்படுகிறது என்பதையும் பொறுத்தே உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.எப்.ஜான்சாமுவேல், விருதுநகர்: எனது மகனுக்கு 16 வயது. எக்கோ பரிசோதனை செய்து பார்த்ததில், 'Conarctation' என்ற வியாதி வந்துள்ளதாக தெரிகிறது. இது என்ன வியாதி?Conarctation of Aorta என்பது இதயத்தின் மிக முக்கிய ரத்தக்குழாயான, மகாதமனிக்குள் சுருக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. இது பிறவியிலேயே ஏற்படுவது. இருதயத்தில் இருந்து, ரத்தத்தை பிறபாகங்களுக்கு எடுத்து செல்லும் மிக முக்கிய ரத்தக்குழாய் மகாதமனி. அதிலேயே சுருக்கம் ஏற்படுவதால் ரத்தஅழுத்தம் கூடுகிறது. சிறு வயதில் ஏற்படும் ரத்தக்கொதிப்புக்கு மிக முக்கிய காரணமாக இந்த Conarctation கருதப்படுகிறது. இதற்கு தற்போது C.T., Angiogram மற்றும் Invasive Angiogram போன்ற பரிசோதனையில் எந்த இடத்தில், எத்தனை சதவீதம், எவ்வளவு தீவிரமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது என கண்டறிய முடியும். அதற்கேற்ப பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சையிலோ அல்லது அறுவை சிகிச்சையிலோ எளிதில் சரிசெய்ய முடியும்.பி.சேதுராமன், தேவகோட்டை: நான் சில ஆண்டுகளாக ரத்தத்தில் கொழுப்பை குறைக்க, ஸ்டேட்டின் (Statin) வகை மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது ரத்தத்தில் கொழுப்பின் அளவு நன்றாக குறைந்து உள்ளது. அதேசமயம் S.G.O.T., S.G.P.T., என்ற அளவுகள் கூடுதலாகவே உள்ளன. நான் ஸ்டேட்டின் வகை மாத்திரையை நிறுத்திவிடலாமா?ஸ்டேட்டின் வகை மாத்திரை என்பது ரத்தத்தில் கொழுப்பை குறைக்கும் மருந்து வகை. இது ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதுடன், பல வழிகளில் ரத்தக்குழாய்களுக்கு நன்மை அளிக்கிறது. குறிப்பாக அடைப்பு கூடாமல் பார்த்து கொள்கிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.இந்த மாத்திரையை தொடர்ந்து எடுப்பதால், மிகச்சில நோயாளிகளுக்கு S.G.O.T., S.G.P.T., போன்ற கல்லீரல் என்சைம்கள் (Enzymes) கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிறிதளவு இந்த என்சைம்கள் அதிகரித்தால், எந்த பாதிப்பையும் அது ஏற்படுத்தாது. அதேசமயம் மிக அதிகமாக அதிகரித்தால் அவசியம் ஸ்டேட்டின் வகை மாத்திரையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக வேறு வகை ஸ்டேட்டின் மாத்திரையை மிகச்சிறிய அளவில், ஒரு நாள் விட்டு ஒருநாள் எடுப்பது போதுமானது. இருப்பினும் இதை உங்கள் இருதய டாக்டரின் ஆலோசனையின் படியே நிறுத்த வேண்டும். நீங்களாகவே இந்த ஸ்டேட்டின் வகை மாத்திரையை நிறுத்தக் கூடாது.எல்.பி.ராமராஜன், திண்டுக்கல்: எனக்கு வயது 45. அலுவலகத்தில் அடிக்கடி நொறுக்கு தீனி எடுக்கும் வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க முடியவில்லை. இதனால் இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?நொறுக்கு தீனி என்பது ஒரு மோசமான பழக்கம் தான். குறிப்பாக வடை, முறுக்கு, மிக்சர், பஜ்ஜி போன்ற எண்ணெய் வகை தயாரிப்பு நொறுக்கு தீனிகள் மற்றும் இனிப்புகளை எடுத்தால் மிக கொடூரமாக பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையே. உங்களுக்கு 45 வயதாகி விட்டதால் எண்ணெயில் பொரித்த நொறுக்கு தீனிகளை அறவே தவிர்த்தாக வேண்டும். மிகவும் பசிப்பதாக இருந்தால் பழவகைகள், சாலட், மாரி பிஸ்கட்களை எடுத்து கொள்வதே சிறந்த பழக்கமாகும். - டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை