உள்ளூர் செய்திகள்

உணவு சாப்பிட்ட பின், இனிப்பு சாப்பிடும் விருப்பம் ஏன் வருகிறது?

உணவு சாப்பிட்டு முடித்ததும், சாப்பிட்ட திருப்தியே இல்லாமல், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த விருப்பம், எப்போதாவது ஏற்பட்டால், அதை இயல்பாக எடுத்துக் கொள்ளலாம். அதுவே, ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும், இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற தீவிர உணர்வு ஏற்படுவது இயல்பானது இல்லை. காரணம், ரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், போதிய துாக்கம் இல்லாதது, மன அழுத்தம் மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள். அதே நேரத்தில், உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதை மட்டும் வைத்து, சர்க்கரை நோய், சர்க்கரை நோயின் முந்தைய நிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் தேவையில்லை. உணவு சாப்பிட்ட பின், ரத்த குளுக்கோஸ் அளவு உயரத் தொடங்கும். இந்த குளுக்கோசை சக்தியாக மாற்றி செல்களுக்கு தருவதற்கான வேலையை செய்ய, இன்சுலின் ஹார்மோனை கணையம் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவில், எந்த அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை இருக்கிறதோ, அந்த அளவிற்கு ரத்த சர்க்கரை அளவு வேகமாக உயரும். அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், விரைவாக செரிமானம் ஆகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயரச் செய்யும். இதை செல்களுக்கு சக்தியாக மாற்ற, அதிக இன்சுலினை கணையம் சுரக்க வேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும், கார்போஹைட்ரேட் அதிகமாக இடம் பெறும் போது, நாளடைவில் கணையம் அயர்ச்சியாகி, தேவைக்கு இன்சுலினை சுரக்காமல், இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகி விடுகிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, டைப் 2 சர்க்கரை நோய் வருகிறது. இனிப்பு சாப்பிடும் உணர்வு இருக்கும் அனைவருக்கும் இன்சலின் எதிர்ப்பு வரும் என்றும் சொல்ல முடியாது. இடுப்பு, வயிறு பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு இருப்பது, உடற்பயிற்சியின்மை, குடும்ப பாரம்பரியம், ரத்தத்தில் அதிக உப்பு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது. என்ன செய்யலாம்? உணவுத் தட்டில், சோறு, ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுகளை மிக் குறைவாகவும், புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். புரதம், நார்ச்சத்து அதிக அளவில் சாப்பிடும் போது, சாப்பிட்ட நிறைவைத் தருவதோடு, மெதுவாக செரிமானம் ஆகி, ரத்த சர்க்கரை அளவு ஒரே சீராக உயருகிறது. சிலருக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு, உடல் நடுக்கம், அதீத வியர்வை, பலவீனம், ஏமாற்ற உணர்வு, இதயத் துடிப்பு அதிகரிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகளுடனும் வரலாம். இந்த அறிகுறிகள் உணவு சாப்பிட்ட பின் இருந்தால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்து விட்டது என்று புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறை உணவுக்குப் பின்னும் இது போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம். இனிப்பு உணர்வின் எச்சரிக்கை அறிகுறிகள் இயல்புக்கு மாறான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல். காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது, குறைவது, தொடர்ச்சியான சோர்வு, பார்வை மங்குதல், பூஞ்சைத் தொற்றுகள், கழுத்து, அக்குள் பகுதிகளில் தோல் தடிப்புகள், மருக்கள் தோன்றுவது, உணவுக்குப்பின் இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை கண்டறிந்து, சரி செய்வது முக்கியம். டாக்டர் ரவிகிரண் முத்துசுவாமி, நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவ ஆலோசகர், சிம்ஸ் மருத்துவமனை, சென்னை. 97908 69797 enquiry@siimshospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Siva Subramaniam
செப் 13, 2026 19:30

Eating sweet after meals, has been in the habits for centuries. Of late, for everything, new reasons are fabricated by many people. Since the introduction of WiFi in the year 2010, millions of opinions have come on nearly everything, practiced by human beings.One has to identify themselves of practices befor changing to new ones.