வீட்டுப்பாடம் எழுதும் ரோபோ வேண்டும்!
ஆசை இல்லாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். அதிலும் மாணவப் பருவத்தில் தோன்றும் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. அந்தக் கற்பனையை வெளியே சொன்னால், சில நேரம் நம்மைச் சிந்திக்கவைக்கும், சிரிக்கவும் வைக்கும். ''உங்கள் கற்பனை உலகில் இருந்து ஓர் அம்சத்தைக் கூறுங்கள்'' என்று கேட்டிருந்தோம். நம் மாணவ வாசகர்களின் கற்பனையை அறிந்துகொள்ள, கோவை, சூலுார், ஆர்.வி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரை நேரில் சந்தித்தோம். பி.டேனிபொன் ஜோஸ்வா, 9ஆம் வகுப்புஎன்னுடைய கற்பனை உலகம் என்பது, ஊழலற்ற ஓர் உலகமாக இருக்க வேண்டும் என்பதுதான். எந்தத் துறையாக இருந்தாலும், கடமை செய்யக்கூட காசு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஊழல்கள் ஒழிந்தால் மட்டுமே நம் நாட்டின் உண்மையான வளர்ச்சியை அறிய முடியும். நாட்டின் வளர்ச்சியே மக்களின் வளர்ச்சி. என்னுடைய பார்வையில் அதுதான் உண்மையான உலகம். அதற்காக, ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். மிருதுளா, 8ஆம் வகுப்புசூப்பர் உமன் மாதிரி, அதீத சக்தியும், பறக்கும் சக்தியும் எனக்கு இருந்தால், அவசர காலத்தில் அவதியுறும் மக்களை அப்படியே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு பறப்பேன். இதன்மூலம், பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ என்னோட எல்லா சக்தியையும் செலவழிப்பேன். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே எந்தச் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வார்கள். மு.தாரணி, 9ஆம் வகுப்புமனிதர்களுக்கு கஷ்டங்களே இருக்கக்கூடாது. அதற்காக இழப்புகளே இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. அதை இலகுவாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மனிதர்கள் அடைந்திருக்க வேண்டும். மார்க் குறையுறது, தேர்வில் தோல்வி இதற்கெல்லாம் யாரும் பதற்றப்படாம இருக்கணும். ஏனெனில், குறிப்பா, மாணவனுக்கும் அவனுடைய பெற்றோருக்கும் வாழ்க்கை என்பது ஒருமுறை பயணம், அதில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம். தீனதயாளன், 6ஆம் வகுப்புநம்ம நாடு ஜாதி, மத, ஏழை, பணக்கார வேற்றுமைகள் இல்லாத சமதர்ம சமுதாயமாக மாற வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பார்கள் அதை உலகிற்கே உணர்த்தும் நாடாக நம் நாடு இருக்க வேண்டும். இதுவே, என்னுடைய கற்பனையான உலகம். இது நிஜமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆலன்கிரிஸ், 8ஆம் வகுப்புஇன்று மக்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர். பிறரைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். உதாரணத்திற்கு, நாம் இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் நம்மைவிட, எதிர்கால சந்ததியினரையே பாதிக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள் என, எங்கு பார்த்தாலும் குவியல் குவியலாகக் காட்சியளிக்கிறது குப்பை. இதனால், மண் வளம் குறைந்து, இயற்கை மாசுபடுகிறது. எனக்கு ஸ்பெஷல் சக்தி கிடைக்க வேண்டும். அதன் மூலம் இந்த உலகை குப்பைகளற்ற உலகமாக மாற்றுவேன்.இலக்கியா, 9ஆம் வகுப்புஇன்றைய நவீன உலகத்தில், கண் கண்ணாடியில்கூட திரைப்படம் பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எனவே, வீட்டுக்கு ஒரு ரோபோ கொடுக்க வேண்டும். அது வீட்டு வேலை முதல் என்னுடைய வீட்டுப்பாடம் வரை அனைத்தையும் செய்து கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த பேண்டஸியான உலகம்தான் என்னுடைய கற்பனை உலகமும்கூட.