தலைநிமிர்ந்த கணிஞர்கள்!
2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க கணித நிகழ்வுகள் மற்றும் மிகச் சிறந்த கணிதப் பரிசுகளை தட்டிச் சென்ற அறிஞர்கள் பற்றிப் பார்ப்போம். 1. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசுஇந்தியப் புள்ளியியல் கழகத்தின் (Indian Statistical Institute) பேராசிரியர் நீனா குப்தாவுக்கு, 2019ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு வழங்கப்பட்டது.70 ஆண்டுகளாக நிலைத்து நின்ற கணித புதிர் 'ஜரிஸ்கி ரத்து சிக்கலை' (puzzle called the Zariski Cancellation Problem) தீர்த்ததற்காக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.சான்றிதழுடன் கூடிய இந்த பரிசு, இந்திய மதிப்பில் ரூபாய் 5 இலட்சமாகும். இந்த பரிசைப் பெற்ற நீனா குப்தா இளையவர் மட்டுமல்ல, இன்று வரை இந்தப் பரிசை வென்ற மூன்றாவது பெண்மணியும் கூட. இதற்கு முன் இப்பரிசை வென்றவர்கள் இராமன் பரிமளா (1987), மைதிலி சரண் (1992) ஆவார்கள். 2. ஏபெல் பரிசுமாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை. ஆனால், அதற்கு இணையான ஏபெல் பரிசு, நார்வே நாட்டு கணிதமேதை ஏபெல் என்பவரின் நினைவாக, கடந்த 15 ஆண்டுகளாக மே மாதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க பெண் கணித அறிஞரான காரன் ஊலென்பெக் (Karen Keskulla Uhlenbeck) என்பவர் 2019ஆம் ஆண்டின் பிரபல ஏபெல் பரிசை வென்றார். இவருக்கு மே 21, 2019 அன்று, இந்த விருது நார்வே அரசரால் வழங்கப்பட்டது.பகுதி வகைக்கெழு சமன்பாடுகள், காஜ் இயல், தொகை முறைகள் போன்றவற்றில் பங்களித்ததற்காகவும், பகுப்பாய்வு, வடிவியல், கணித இயற்பியல் போன்ற கணித உட்பிரிவுகளில் அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தி, மேம்படுத்தியதற்காகவும் இவருக்கு ஏபெல் பரிசை வழங்கி சிறப்பித்ததாக, ஏபெல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது. 3. இராமானுஜன் பரிசு (ICTP) 2019ஆம் ஆண்டிற்கான இராமானுஜன் பரிசை, கலப்பெண்கள் பகுப்பாய்வில் (Complex Analysis) குறிப்பாக ப்ளூரி பொடென்ஷியல் (Pluri potential) கோட்பாட்டிற்குச் செய்த சிறந்த பங்களிப்புகளை அங்கீகரித்து வழங்கப்பட்டது.இப்பரிசு, ஹனோய் நகரில் உள்ள வியட்நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமியின் பேராசிரியர் ஹோங் ஹைப்பாம் (Hoàng Hiep Pham) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 4. சாஸ்திரா இராமானுஜன் பரிசு2019ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் (Warwick University) உதவிப் பேராசிரியரான கணிதவியலாளர் ஆடம் ஹார்ப்பருக்கு (Aadam Harper), சாஸ்திரா இராமானுஜன் பரிசு வழங்கப்பட்டது.பகுப்பாய்வு மற்றும் நிகழ்தகவு எண்கோட்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புகளுக்காகவே இப்பரிசு. சான்றிதழுடன் கூடிய இந்தப் பரிசின் மதிப்பு, இந்திய மதிப்பில், 7.2 இலட்சமாகும். 5. உல்ப் பரிசுஉலக அளவில் கணித அறிஞர்களுக்கான மூன்றாவது பெரிய விருது, உல்ப் பரிசு (Wolf Prize) ஆகும். புகழ்பெற்ற உல்ப் பரிசை, இஸ்ரேல் நாட்டின் உல்ப் நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. விவசாயம், வேதியியல், இயற்பியல், கணிதம், மருத்துவம் மற்றும் கலை ஆகிய ஆறு துறைகளில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு கணிதத்தில் மிகச்சிறந்த சாதனை புரிந்ததற்காக, பிரெஞ்சு நாட்டின் ஜீன் பிரேன்காய்ஸ் லி கால் (Jean-Francois Le Gall) மற்றும் அமெரிக்காவின் கிரகோரி லாலெர் (Gregory Lawler) ஆகியோருக்கு கணிதத்திற்கான உல்ப் பரிசு வழங்கப்பட் டுள்ளது. 5. சர்வதேச கணித ஒலிம்பியாட்2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. 112 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், இந்தியா 15வது இடத்தைப் பிடித்தது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த பதினைந்து வயது மாணவர் பிரஞ்சல் ஸ்ரீவத்சவா இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம் இது. கணிதத்தை மனப்பாடம் செய்யாமல் விரும்பிப் படித்தால் எதையும் சாதிக்கலாம் என பிரஞ்சல் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பிரஞ்சல் ஸ்ரீவத்சவா வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். 2012ஆம் ஆண்டில் இந்தியா 11வது இடத்தைப் பிடித்தது. அதற்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த சிறந்த இடமாக இந்த ஆண்டு விளங்குகிறது. வரும் ஆண்டுகளில் பிரஞ்சல் ஸ்ரீவத்சவா போல பல இந்திய மாணவர்கள் சாதிக்க உற்சாகம் அளிப்போம். உலக அளவில் இந்தியாவின் கணிதப் பங்களிப்பு மேன்மேலும் அதிகரிக்க ஒருங்கிணைந்து செயற்படுவோம்.தி. நெ. சண்முகம், இரா. சிவராமன்.