உள்ளூர் செய்திகள்

நம்மைத் தொடரும் வண்டி!

தொடர்வண்டியை (அதாங்க ரயில்...) முதலில் மக்கள் பார்த்தபோது 'சமையலறை ஒன்று, ஊரையே இழுத்து வருகிறது' என்று வியப்பாகப் பேசினார்களாம்! ரயில் தங்கள் ஊர் வழியாக வருவதைக் கேள்விப்பட்டு, அதன் ராட்சச உருவத்தைக் கற்பனை செய்யமுடியாமல் ஊரைக் காலி செய்து வேறு ஊருக்குப் போனவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்!ஆரம்ப காலத்தில் ரயில்கள் நீராவியால் ஓடின. இட்லி வேகவைப்பது மாதிரியான அன்றாடச் சமையல் வேலைகளில் நாம் நீராவியைப் பயன்படுத்தி வருகிறோம். ஆகவே, அந்நாளைய மக்கள் ரயிலை சமையலறை என்று வர்ணித்ததிலும் தப்பில்லை! உலகம் முழுக்க, ஓர் உடலின் நரம்புகளைப் போல் ஓடுகின்றன ரயில் பாதைகள். இந்த வகைப் போக்குவரத்தின் ஆரம்பம் ஒரு படிக்காத மேதையிடம் இருந்து வந்தது. அந்த மேதையின் பெயர் ஜார்ஜ் ஸ்டீபன்சன். இவர், இங்கிலாந்திலுள்ள வைலம் பகுதியைச் சேர்ந்தவர். ராபர்ட், மேபல் தம்பதிக்கு 1781, ஜூன் 9ல் பிறந்தார். பள்ளிக்குச் செல்ல வசதி இல்லை. மாடு மேய்த்தார். மனதில் படிப்பு ஆர்வம் அலை அடித்தது. பதினேழு வயதில் தந்தையுடன் சேர்ந்து நிலக்கரிச் சுரங்க வேலைக்குச் சென்றார். அங்கே கிடைத்த கூலியை வைத்து இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்வியில் உயர்ந்தார். சுரங்கப் பணியிலும் நிபுணர் ஆனார். நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி கண்பார்வையைப் பறிகொடுத்தார் இவரது தந்தை. இதற்காகவே, 'நிலக்கரி வெட்டும் இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும்' என்று உறுதிகொண்டார் ஸ்டீபன்சன். சுரங்கங்களில் பயன்படுத்தும் 'பாதுகாப்பு விளக்கு' இவரது கண்டுபிடிப்புதான். இந்தக் கண்டுபிடிப்பு இவருக்குப் பேரும் புகழும் தந்தது.ரயில் 'ராக்கெட்': வேறு சிலவற்றைக் கண்டுபிடித்து இருந்தாலும் நீராவி இயந்திரத்தை உருவாக்க அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டார். அதன் மூலமாக, ஒரு தொடர்வண்டியை உருவாக்கி, அதனை 1825ஆம் ஆண்டு ஸ்டாக்டன் என்ற ஊரிலிருந்து டார்லிங்டன் என்ற ஊர்வரை தண்டவாளம் அமைத்து ஓட்டிக் காட்டினார். அதுதான் உலகப் புகழ்பெற்ற 'ராக்கெட்' என்ற தொடர்வண்டி! இதனால், ஜார்ஜ் ஸ்டீபன்சனின் புகழ் உலகெங்கும் பரவியது. நீராவியில் இயங்கும் இயந்திரத் தொடர் வண்டியைக் கண்டுபிடித்து மிகப்பெரிய தொழிற்புரட்சிக்குக் காரணமானார்.'தொடர்வண்டிப் பாதையின் தந்தை' என்று அழைக்கப்பட்ட ஸ்டீபன்சன் 1848, ஆகஸ்ட் 12ல் மரணமடைந்தார். ஆனாலும் ரயில் வண்டியின் அந்த தடக்... தடக்... சத்தம் கேட்கும்வரை ஸ்டீபன்சன் நம்முடன் பயணிப்பார்!ஹெட்டன் சுரங்க ரயில்பாதைக்காக 1820ல், 13 கி.மீ. தூரம் தொடர்வண்டிப் பாதை அமைத்துத் தொடர்வண்டி ஓட்டினார். இதுவே, உலகின் முதல் தொடர்வண்டிப் பயணம்.உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை இங்கிலாந்தில் அமைத்தார். அது உலகத் தரமான பாதையாக இன்றும் இருக்கிறது. அதற்கு, 'ஸ்டீபன்சன் பாதை' என்று பெயர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !