ஓவியர் ஹிட்லர்
ஜெர்மனியின் அதிபராக இருந்தவர் அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler). சர்வாதிகார ஆட்சி செய்தவர். இரண்டாம் உலகப் போர் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர். பல்லாயிரக்கணக்கான மக்களை ராணுவத்தின் மூலம் கொன்று குவித்தவர். இப்படி கொடூர மனம் கொண்ட ஹிட்லர் ஓவியராகவும் இருந்தார். ஓர் ஏழைக் குடும்பத்தில் ஏப்ரல் 20, 1889ல் பிறந்த ஹிட்லர், அம்மா மீது அதிக அன்பு வைத்திருந்தார். அதே அளவு அன்பை ஓவியத்தின் மீதும் வைத்திருந்தார். இளம் வயதில் இருந்தே வாட்டர் கலர் பெயிண்டிங் வரைவது ஹிட்லருக்குப் பிடிக்கும். தான் நடந்து செல்லும் சாலை, சர்ச், தொழிற்சாலைகளில் கூடியிருக்கும் மக்கள் என்று கண்ணில் கண்டவற்றை எல்லாம் ஓவியங்களாக வரைய ஆரம்பித்தார்.ஓவியம் வரைவதை முறையாகக் கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தந்தையிடம் சொன்னார். ஆனால் அப்பாவோ, ஹிட்லரின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளவில்லை. ஹிட்லரை தான் விரும்பிய ஒரு படிப்பில் சேர்த்துவிட்டார். விருப்பம் இல்லாமலேயே படித்து முடித்தார் ஹிட்லர். குடும்பத் தேவைக்காக ராணுவத்தில் சேர நேர்ந்தது.தந்தை இறந்த பின் ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். முதல் முறை தேர்வாகவில்லை. அதற்கடுத்த வருடமும் வியன்னா ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்தார். இந்த முறையும் ஹிட்லருக்குத் தோல்விதான் கிடைத்தது.இதனால் சோர்ந்துபோய் தன் ஆர்வத்தை விட்டுவிடவில்லை. கிடைத்த ஓய்வு நேரத்தை எல்லாம் படங்கள் வரைவதிலேயே செலவிட்டார். யாரும் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்காமல், தான் வரைந்தவற்றை எல்லாம் பத்திரமாக எடுத்துவைத்தார்.இடையில் ஜெர்மன் அதிபராகி நாடு பிடிக்கும் ஆசை அவர் மனதில் எழுந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்தது. போரின் முடிவில் (ஏப்ரல் 30, 1945) இறந்தும் விட்டார்.இப்படி வரலாற்றின் பக்கங்களில் வில்லன் என்ற பெயர் வாங்கிய ஹிட்லரின் ஓவியங்கள், சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரியா நாட்டின் பண்ணை வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஓவியங்கள் 1908ல் ஹிட்லரால் வரையப்பட்டவை.இத்தனை ஆண்டுகள் கழித்து உலகத்தின் பார்வை இந்த ஓவியங்கள் மீது விழ, உலக அளவில் அது பேசும் படங்களாகி விட்டன. ஏலத்திற்கும் வந்து விட்டன.