உள்ளூர் செய்திகள்

நினைத்ததை அடையலாம்

* மனதில் உறுதி இருந்தால், நினைத்ததை அடைவது எளிய செயல்.* ஒருவர் என்னதான் படித்தாலும், அவருடைய இயல்பான அறிவே மேலோங்கி நிற்கும். * தான் கற்றவற்றை கற்றவர் முன் தெளிவாகச் சொல்பவரே, உண்மையில் கற்றவர். * தேர் கடலிலும், கப்பல் தரையிலும் ஓடாது. அதுபோல் தனக்குரிய இடத்தில்தான் ஒருவர் சிறப்பாக செயல்படுவார். * ஒருசெயலை ஒருவர் செய்து முடிப்பார் என அறிந்தால், அதை அவரிடமே ஒப்படைத்துவிட வேண்டும். * தாய் பசியில் இருந்தாலும், பெரியவர்கள் பழிக்கும் செயலை செய்யாதே. * செயல் வேறு, சொல் வேறு என செயல்படுபவரின் நட்பு கனவிலும் இனிமை தராது.* கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர் தவறு செய்வதில்லை.* முயற்சி செய்தால் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் வறுமையே வரும்.* மது அருந்தியவனிடம் நல்லதை சொல்லி திருத்துவது என்பது, நீரில் மூழ்கியவரை தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.* பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்தால், இன்பம் இடைவிடாமல் வரும்.* மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறியும்.* உலகத்தை வெல்ல வேண்டும் என நினைப்பவர், கலங்காமல் உரிய காலத்திற்காக காத்திருப்பார். நம்பிக்கை தருகிறார் திருவள்ளுவர்