அழிந்தது ஆணவம்
ஒருமுறை புஷ்ப விமானத்தில் வலம் வந்தான் ராவணன். அப்போது வான் வெளியில் பரவியிருந்த யாகப்புகையின் மணமும், தெய்வீக மந்திர ஓசையும் காந்தமாக அவனை கவர்ந்தது.கீழே பார்த்த போது பொதிகை மலையின் அடிவாரத்திலுள்ள அகத்திய முனிவரின் ஆஸ்ரமம் தெரிந்தது. அப்படியே அங்கு புஷ்ப விமானத்தை இறக்கினான். அப்போது மனதிற்குள் ' உலகிலேயே சிறந்த சிவபக்தன் நானே... நம்மை விட இந்த குறுமுனிவர் சிறந்தவராக இருக்க முடியாது'' என அலட்சியமாக எண்ணிக் கொண்டான். அவனது எண்ணத்தை குறிப்பால் உணர்ந்தார் அகத்திய முனிவர். இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல், ''இலங்கை மன்னவனே... வருக வருக'' என வரவேற்றார் முனிவர். பால், பழம் கொடுத்து உபசரித்து விட்டு, ''ராவணா! யாழ் இசைப்பதில் நீ வல்லவனாமே'' எனக் கேட்டார். ''ஆம். அதில் என்ன சந்தேகம் முனிவரே?'' என்றான் ஆணவத்துடன்.''அப்படியானால் யாழ் இசைத்து என்னை உன்னால் வெல்ல முடியுமா'' என போட்டிக்கு அழைத்தார் அகத்தியர். ''இப்போதே வெற்றி பெற்று காட்டுகிறேன்'' என சவால் விட்டான் ராவணன். யாழ் இசைப்பதில் வல்லவன் ராவணன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அகத்தியர் யாழ் வாசிப்பதைக் கேள்விப்பட்ட அனைவரும் போட்டியைக் காண அங்கு கூடினர். ராவணனுக்குத் தன் திறமையின் மீது அதிக நம்பிக்கை இருந்தது. அகத்தியர் தோற்கப் போவது உறுதி எனக் கருதி, '' முனிவரே... நீங்களே முதலில் இசைக்கத் தொடங்குங்கள். உங்களின் இசையில் நான் உள்ளம் உருகினால் வெற்றி பெற்றவர் ஆவீர்கள்'' என்றான். ''உள்ளம் உருகுவதை பிறர் பார்க்க முடியாதே. அதனால் இந்த பொதிகை மலையை உருக வைக்கிறேன்'' என்றார் அகத்தியர். சிவபெருமானை மனதார வழிபட்டு யாழைக் கையில் எடுத்த அகத்தியர் இசைக்கத் தொடங்கினார். மலை உருகத் தொடங்கியது. அதிசயத்தைக் கண்ட அனைவரும் வியந்தனர். கல்லும் கரைந்து விட்டதே என ராவணன் வெட்கப்பட்டான். ''முனிவரே உம்மிடம் நான் தோற்றேன். இசையிலும், சிவபக்தியிலும் என்னை மிஞ்சியவர் யாருமில்லை என்ற ஆணவம் இன்றோடு அழிந்தது. குருநாதரான தங்களின் அருளால் உண்மையை உணர்ந்து கொண்டேன்'' என கைகுவித்து வணங்கினான் ராவணன்.