உள்ளூர் செய்திகள்

எப்படி பேச வேண்டும்

பண்ணையார் வீட்டுக்கு வந்த மீனவர் ஒருவர், ''ஐயா! தங்களுக்காக அரிய வகை மீன்கள் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றார். பண்ணையாரும் மகிழ்ச்சியுடன் பொற்காசு ஒன்றைக் கொடுக்க நன்றி சொல்லி புறப்பட்டார் மீனவர். ஆனால் பண்ணையாரின் மனைவி, ''அற்ப மீனுக்கு பொற்காசா...திரும்பி வாங்குங்கள்'' என கோபமாக கத்தினாள். ''முடிந்து போன வியாபாரத்தை மாற்றுவது சரியல்ல'' என மறுத்தார் பண்ணையார்.''சரி அவனிடம் இந்த மீன் ஆணா பெண்ணா.... எனக் கேளுங்கள். ஆண் என்று சொன்னால் பெண் மீன் வேண்டும் என்றும், பெண் என்று சொன்னால் ஆண் மீன் வேண்டும் என்றும் கேளுங்கள்'' என்றாள் பண்ணையாரின் மனைவி. எப்படியும் பொற்காசுகளை திரும்ப பெற வேண்டும் என்பது அவளின் எண்ணம். உஷாரான மீனவர், ''ஆணுமில்லை; பெண்ணுமில்லை. இரண்டு குணமும் கொண்ட அதிசய மீன் இது. அதனால் தான் உங்களுக்காக கொண்டு வந்தேன்'' என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்த பண்ணையார் மேலும் ஒரு பொற்காசு கொடுத்தார் அந்தக்காசு கைநழுவி கீழே உருண்டது. மீனவர் அதை வேகமாக எடுக்கப் போனார்.கோபம் கொண்ட பண்ணையாரின் மனைவி, ''பேராசைக்காரன்...காசை எடுப்பதில் என்ன வேகம் காட்டுகிறான் பாருங்கள்'' என்றாள். ''பேராசை இல்லையம்மா...மகாலட்சுமியின் அம்சமான பொற்காசை மதிப்பது என் கடமையல்லவா'' என்றார். மனம் நெகிழ்ந்த பண்ணையார் மேலும் ஒரு காசு கொடுத்தார்.பண்ணையாரின் மனைவி வாயை மூடிக் கொண்டாள். யாரிடம் எப்படி பேச வேண்டும் எனத் தெரிந்தவரிடமே திருமகள் தேடி வருவாள்.