அறிவுக்கு வேலை கொடு!
காட்டில், ஒரு சிங்கத்திற்கு பயங்கர பசி. ஏதாவது தந்திரம் செய்து உணவை தேட நினைத்தது.அப்போது அதன் எதிரில் சென்ற ஆட்டுக்குட்டியை அழைத்து, ''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்'' என்றது.ஆடு முகர்ந்து பார்த்து, ''ஆமாம்'' என்றது.உடனே சிங்கம், ''உனக்கு எவ்வளவு திமிர். என் வாய் நாறுகிறது என்கிறாயா...''என கூறி அதனை கொன்றது.அடுத்து ஒரு ஓநாயை அழைத்து அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. ஓநாயும் முகர்ந்து பார்த்து,, சிங்கத்தை பற்றி புரிந்து கொண்டு, ''கொஞ்சம் கூட நாறவில்லை'' என்றது. சற்று யோசித்த சிங்கம்,''மூடனே... பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்று சாப்பிட்டது.இன்னும் பசி அடங்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தது. நரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனிடமும் அதே கேள்வியைக் கேட்டது. நரி முகர முயற்சிக்கவில்லை. மாறாக,''எனக்கு நாலுநாளா ஜலதோஷம். அதனால் ஒரு வாசனையும் தெரியவில்லை'' என்று கூறி சிங்கத்தை வாயடைத்தது. சிங்கமும் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டது.பிரச்னையைக் கண்டு பயப்பட தேவையில்லை. அறிவுக்கு வேலை கொடுத்தால் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.