தாய்க்கு தெரியாதா...
UPDATED : மே 11, 2018 | ADDED : மே 11, 2018
குருவிடம் சீடன் கேட்டான், ''குருவே, எல்லா மனிதனுடைய விருப்பத்தையும் கடவுளால் நிறைவேற்ற முடியுமா?” ''அதில் என்னப்பா சந்தேகம்?'' ''விறகுவெட்டி, எப்போதும் குளிரடிக்க வேண்டும் என்று வேண்டுகிறான்'' ''வேண்டட்டும்...'' ''பழவியாபாரி, வெயில் கொளுத்த வேண்டுகிறான்''''இருக்கட்டும்...'' ''விவசாயி மழை கேட்கிறான்'' ''கேட்கட்டும்...''''இப்படி, ஆளாளுக்கு ஒன்றை கேட்டால் கடவுள் எதை தான் கொடுப்பார்?''''எதையும் கொடுப்பார்!''''என்ன சுவாமி... நீங்களும் குழப்புகிறீர்களே...?'' சிரித்தபடி குரு கேட்டார், ''இப்போது வானிலை எப்படி இருக்கிறது?” ''வெயில் காய்கிறது” ''போன மாதம் எப்படி இருந்தது?”''மழை பெய்தது” ''அதற்கு முன்?''''குளிர்''''பார்த்தாயா... அனைவரின் ஆசையும் நிறைவேறி விட்டது. எந்த குழந்தைக்கு, எப்போது, எதை கொடுக்க வேண்டும் என்பது தாய்க்குத் தெரியாதாப்பா?''