உள்ளூர் செய்திகள்

விட்டலனின் விளையாட்டு - 9

மரமாய் மாறிய மாபெரும் பக்தைஸந்த் நாமதேவர் எழுதிய 'சத்குரு ஸாரிகா' என்று தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள். 'விட்டலனுக்கு சமமான நெருங்கிய நண்பர் எனக்கு வேறு யாரும் கிடையாது. என் சம்சார உத்வேகத்தை தகர்த்தெறிந்தார். எனக்கு மேலும் ஜென்மம் இல்லாதவாறு செய்துள்ளார். ஆத்ம சுகத்தை எனக்குக் காட்டினார். அகக்கண்களை திறந்து வைத்து ஆனந்தத்தை நிறைத்தார். எனக்கு சரியான புண்ணியமான மார்க்கத்தை அளித்த அவரது சரணத்தை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்',,,'கண்ணன் ராதையிடம், 'என் உடல் வெப்பம் தணிய உன் மலர்ப்பாதத்தை என் தலை மீது வை' என்று வேண்டுகிறான். இப்படி ஒரு வரியை தன்னையும் அறியாமல் தனது காவியத்தில் எழுதிவிட்ட ஜெயதேவர் அதற்காக வருந்தி அந்த ஓலையைக் கிழித்து போட்டுவிட்டு எண்ணெய் நீராட நதிக்கரைக்குப் போனார் என்று கூறினேன் அல்லவா?' என்று கேட்டார் பத்மநாபன்.'ஆமாம் நினைவிருக்கிறது; தொடர்ந்து சொல்லுங்கள்' என்றாள் பத்மாசனி.'சில நிமிடங்கள் கழித்து எண்ணெய்த் தலையோடு வீட்டுக்கு வந்த ஜெயதேவரைப் பார்த்து பத்மாவதிக்கு வியப்பு ஏற்பட்டது. ஒரு சுவடியை எடுத்து எழுத்தாணியால் சில வரிகளை எழுதினார். பின் மீண்டும் ஆற்றங்கரைக்குக் கிளம்பி விட்டார். மீண்டும் அவர் வீடு திரும்பிய போது ஓலைச்சுவடியை எடுத்துப் பார்க்க, அதில் அன்று காலை தான் எழுதிய வரிகள் இருந்தன. அந்த ஓலைச்சுவடியைத்தான் கிழித்துப் போட்டு விட்டோமே! அதிர்ச்சியுடன் மனைவியை அழைத்து 'இந்த ஓலையில் நீ எதையாவது எழுதினாயா?' என்று கேட்டார். பத்மாவதி குழப்பத்துடன் 'நீங்கள்தானே சற்று முன் எண்ணெய்த் தலையோடு வந்து இதை எழுதினீர்கள். ஓலையில் கூட எண்ணெய்க் கறை பட்டிருக்கிறது பாருங்கள்' என்றாள். ஜெயதேவருக்கு உண்மை புலப்பட்டது. தான் எழுதிய வரிகளில் தவறில்லை என்பது போல கண்ணனே அங்கு வந்து அந்த வரிகளை எழுதி சென்றிருக்கிறான். அது தனது பாக்கியம் அல்லவா? சொல்லப்போனால் கண்ணனைக் கண்ட தன் மனைவி தன்னைவிட பாக்கியம் செய்தவள் அல்லவா? தன் மனைவியின் கரங்களைப் பற்றி 'ஜெயது பத்மாவதி ரமண ஜெயதேவகவி' என்றார் கண்ணீர் மல்க. பத்மாவதி கணவனான நான் வெற்றி பெற்றேன் என்பது அந்த வாக்கியத்தின் பொருள். இந்த நிகழ்ச்சியைப் பரவசத்துடன் கூறியபடியே தன் மனைவியின் பாதங்களைப் பிடித்து விடத் தொடங்கினார் பத்மநாபன்.அப்படியே கானோபாத்ராவின் வாழ்வில் நிகழ்ந்த பிற அற்புதங்களையும் தொடர்ந்தார்.,,,விட்டலன் கோயில் வாசலில் அரசன் அனுப்பிய வீரர்கள் கானோபாத்ராவை அழைத்துச் செல்ல காத்திருந்தனர். அரண்மனைக்குச் செல்ல மறுத்து விட்டலன் பக்தியிலேயே தன் வாழ்வைக் கழிக்க விரும்பிய கானோபாத்ரா கண்ணனை எண்ணியபடியே கோயிலுக்குள் மூர்ச்சை அடைந்திருந்தாள். மயங்கி விழுந்தவள் தன் இறுதி மூச்சையும் விட்டாள். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்றன அந்த அற்புதக் காட்சிகள். கானோபாத்ராவின் உடலில் இருந்து ஒரு ஜோதி புறப்பட்டது. அது விட்டலனின் திருவுருவத்துடன் கலந்தது. இதைப் பார்த்த அர்ச்சகர்கள் பிரமித்தனர். கானோபாத்ராவின் பக்தி அவர்களை நெக்குருக வைத்தது. அவள் ஜோதி வடிவில் கண்ணனுடன் கலந்தது அவர்களை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதே சமயம் வாசலில் இருந்த அரசு வீரர்கள் 'இன்னுமா வெளியே வரத் தாமதம்?சீக்கிரம் வாருங்கள்' என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உள்ளே வந்து விடுவார்கள் என்பதும் புரிந்தது. கானோபாத்ராவின் உடலைக் கூட அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது! அர்ச்சகர்கள் விரைவாகச் செயல்பட்டார்கள். கோயிலின் பிராகாரத்தில் உள்ள ஒரு பகுதியில் குழி தோண்டி அதில் கானோபாத்ராவின் உடலைப் புதைத்தார்கள். அப்படிப் புதைத்த அடுத்த கணமே அந்த இடத்திலிருந்து ஒரு மரம் மேலெழும்பியது. அது மிகச் செழிப்பாக இருந்தது. அர்ச்சகர்கள் திகைப்புடன் அதை நமஸ்கரித்தார்கள். சற்று நேரத்தில் அரச வீரர்கள் உள்ளே நுழைந்தனர்.அர்ச்சகர்கள் கூறியதை அவர்களால் நம்ப முடியவில்லை. அதே சமயம் அரச வீரர்களாகிய தங்களிடம் பொய் கூற மாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். கோயில் முழுவதும் தேடிப் பார்த்தும் கானோபாத்ராவை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விரைந்தோடி அரசனை அணுகினார்கள். அவன் நேரடியாகவே விட்டலன் கோயிலை அடைந்தான். அங்கிருந்த விருட்சத்தை பார்த்ததும் அவன் மனம் தானாகவே மாறியது. அவன் கைகள் குவித்து நமஸ்கரித்தான். அன்று முதல் இன்று வரை கோடிக்கணக்கானவர்கள் அந்த விருட்சத்தைப் பணிகின்றனர். கடவுளிடம் கலக்க உண்மையான பக்தி ஒன்றைத் தவிர வேறெதுவும் அவசியமில்லை என்பதை கானோபாத்ரா உணர்த்திவிட்டார். அந்த விருட்சத்துக்கு அருகே உள்ள வாயிலை இன்றளவும் கானோபாத்ரா நுழைவாயில் என்றே அழைக்கிறார்கள். விட்டலனின் பரம பக்தர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றொருவர் நாம தேவர். பக்தி மார்க்கத்தைப் பரப்பியவர்களில் முக்கியமானவர். மகாராஷ்டிரத்திலிருந்து பஞ்சாப் வரை விட்டல மகிமையைப் பரப்பியவர். இரண்டாயிருத்துக்கும் மேற்பட்ட அபகங்களை இயற்றியவர். சிறிதாக இருந்த விட்டலனின் கோயிலை விரிவுபடுத்தியவர். அவர் பிறப்பே பரவசம் அளிக்கக் கூடிய ஒன்று.பண்டரிபுரத்தில் தாம்சேட்டி என்பவர் வசித்து வந்தார். அவரும் அவரது மனைவி குணாபாயும் விட்டலனின் மீது பக்தி கொண்டவர்கள். குறைவில்லாத பக்தி என்றாலும் குறை ஒன்று வேறொரு கோணத்தில் அவர்களுக்கு இருந்தது. இந்த பிறவியில் குழந்தை இல்லாமல் போனதே என்பதுதான் அந்தக் குறை. காரணம் அவர்கள் முதுமைப் பருவத்தில் அடி எடுத்து வைத்திருந்தனர்.தனக்குத் தாய்மை பேறு கிடைக்காததை எண்ணி மருகியபடி ஒரு நாள் குணாபாய் உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் ஒளி வெள்ளம் தெரிந்தது. பின்னணியில் ஒரு தெய்வ வாக்கு ஒலித்தது. 'குணாபாய், கவலைப்படாதே நாளைக் காலை உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் எனக்கு அணுக்கமான தொண்டனாக இருப்பான்'. கண் விழித்தபோது குணாபாயின் முகத்தில் ஆனந்தம் தாண்டவம் ஆடியது. தனது கனவையும் ஆனந்தத்தையும் தன் கணவரிடம் வெளிப்படுத்தினாள் குணாபாய். இதைக் கேட்டு தாம்சேட்டி மகிழ்ந்தார். ஆனால் அடுத்த கணமே அவர் முகம் வாட்டமுற்றது. 'குணா, இது உன் பிரமையாக இருக்கக்கூடும்' என்றவர் அதற்கான இரு காரணங்களை கூறினார். தனக்கு வயது அறுபது என்பதையும் குணாபாயின் வயது ஐம்பதைத் தாண்டி விட்டது என்பதையும் நினைவுபடுத்தினார். தவிர பத்து மாத வளர்ச்சிக்குப் பிறகுதான் ஒரு கரு குழந்தையாகப் பிறக்கும். அப்படி இருக்க ' நாளைக்காலை உனக்கு மகன் பிறப்பான்' என்பது எப்படி சாத்தியம்?-தொடரும்ஜி.எஸ்.எஸ்.,aruncharanya@gmail.com