| ADDED : ஜூலை 25, 2024 09:29 PM
'இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இவரை கையில் பிடிக்க முடியாது...' என, ஆந்திர மாநில துணை முதல்வரும், பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள். இங்கு, முதல்வர் சந்திர பாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பவன் கல்யாண், 2014ம் ஆண்டில் இருந்தே தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். ஆனால், சொல்லிக் கொள்ளும்படி வெற்றி கிடைக்கவில்லை. சமீபத்திய தேர்தலில், 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட, ஜனசேனா வேட்பாளர்கள் அனைத்திலுமே வெற்றி பெற்றனர். இரண்டு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றனர். இதற்கு பரிசாகத் தான், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்துள்ளது. ஆந்திராவில் அவரது கட்சி வேகமாக வளரத் துவங்கியுள்ளது. சமீபத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், 'மும்பையில் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போயிருந்தேன். அங்கு வந்த எல்லாருமே என்னை வந்து பார்த்து, எப்படி இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது என, ஆச்சரியம் தெரிவித்தனர். 'அரசியலில் நமக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தேசிய அளவில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக நாம் உருவெடுத்து விடலாம்...' என்றார். எதிர்க்கட்சியினரோ, 'ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இவ்வளவு ஆட்டமா...' என, கிண்டல் அடிக்கின்றனர்.