'ரொம்ப ஓவரா தெரியலை...!'
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சமீபத்தில், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'இந்தியாவில் பா.ஜ., வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. கூட்டணிக்காக யார் வீட்டு கதவையும் இதுவரை தட்டியதில்லை; மற்ற கட்சிகள் தான் பா.ஜ., கதவை தட்டியுள்ளன. தமிழகத்தில் அதே நிலை தான் இப்போதும் இருக்கிறது. முழுக்க முழுக்க மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறோம். ஆனாலும் மக்களுக்கு பகட்டான அரசியல் கட்சிகள் தான் கண்ணில் தெரிகிறது' என்றார். மேலும், 'வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.,வுக்கு உண்டு. அதற்காக, கூட்டணி வைக்க வருவோர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என, ஓடிப்போய் கூட்டணி வைக்கமாட்டோம்... கூட்டணிக்காக யார் வீட்டு வாசலிலும் போய் பா.ஜ., நிற்காது; மற்ற கட்சிகள் தேடி வந்தால் பரிசீலிப்போம்...' என்றார். பேட்டி முடிந்து வெளியே வந்த மூத்த நிருபர் ஒருவர், 'நம்பிக்கை இருக்க வேண்டியதுதான், அதுக்காக இப்படியெல்லாம் பேசுறது, ரொம்ப ஓவரா தெரியலை...' என்று,'கமென்ட்' அடித்துவிட்டுச் சென்றார்.
'கால் ஒடிஞ்சாலும்...!'
ஆசிரியர் தினத்தையொட்டி, நல்லாசிரியர்களுக்கு தமிழக அரசின், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கும் விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா பேசும்போது, 'நானும் ஒரு காலத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி உள்ளேன். அதனால் தான், சொல்லவரும் விஷயத்தை பிறருக்கு புரியும்படி வெளிப்படுத்தும் திறன் எனக்கு வளர்ந்தது. மாதக்கணக்கில் விடுமுறையை அனுபவிக்கும் ஆசிரியர்களை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கும். நாம் கூட பேசாமல் விரிவுரையாளராகவே இருந்திருக்கலாமோ என, எண்ணத் தோன்றும். தற்போதுள்ள பணியில், கால் ஒடிந்தாலும், 'பைல்' பார்க்க வேண்டியுள்ளது' என்றார். விழாவில் பங்கேற்ற பார்வையாளர் ஒருவர், 'மெடிக்கல் லீவிலும், இவர் வீட்டுல, 'ஆபீஸ் பைல்'களை பார்த்திருப்பாரோ? அந்த ஆதங்கத்துல தான் இப்படி பேசுறாரு போலிருக்கு...' என, 'கமென்ட்' அடித்துச் சென்றார்.