| ADDED : ஜூலை 16, 2024 12:20 AM
திருவல்லிக்கேணி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே, உயர் மின் அழுத்த மின்வடம் முறையாக பூமியில் பதிக்கப்படாததால், பயணியர் மட்டுமின்றி பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, மாநகராட்சியினர் மேற்கொண்டனர்.இதற்காக, பூமியில் பதிக்கப்பட்ட உயர் அழுத்த மின்வடம் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. வடிகால் அமைக்கப்பட்ட பிறகும் கூட, வெளியே எடுத்த உயர் அழுத்த மின்வடத்தை, மீண்டும் பூமியில் பதிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த மின்வடம் தேங்கும் கழிவுநீருக்குள் செல்வதாலும், தற்போது திடீர் திடீரென மாலை நேரத்தில் மழை பெய்து வருவதாலும், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மின்வடத்தை பூமியில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.