| ADDED : மார் 06, 2024 01:49 AM
வேடசந்துா:திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டியில் பள்ளிக்குச் சென்ற மாணவரை வட மாநிலத்தினர் கடத்த முயற்சி என தனியார் 'டிவி' லோகோவை டவுன்லோட் செய்து போலியாக பதிவை 'வாட்ஸ் ஆப்'பில் பரவ விட்டவரை போலீசார் கைது செய்தனர்.பாம்புலுபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் 23. டிப்ளமோ படித்த இவர் கோவையில் வேலை செய்த நிலையில் தற்போது ஊரில் வீடியோ, போட்டோகிராபராக உள்ளார். இவர் பிரபல தனியார் 'டிவி' லோகோவை மீம் கிரியேட்டிவ் ஆப்பில் டவுன்லோட் செய்து, பாம்புலுபட்டியில் பள்ளிக்கு சென்ற மாணவரை வட மாநிலத் தொழிலாளர்கள் கடத்த முயற்சி என பதிவிட்டு 'டிவி 'யில் செய்தி வந்ததைப் போல் 'வாட்ஸ் ஆப்'பில் பரவ விட்டார்.இந்த தகவல் கிராமங்களில் மிகவேகமாக பரவியது. பாம்புலுபட்டி, திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லையில் உள்ளதால் இரண்டு மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் உத்தரவில் வேடசந்துார் டி.எஸ்.பி., துர்கா தேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சமூக வலைதள ஐ.டி.,யில் ஒரு அலைபேசி நம்பர் வந்ததை தொடர்ந்து அதனடிப்படையில் தங்கராஜை பிடித்து விசாரித்தனர். மாணவரை கடத்த முயற்சி என ஆர்வத்தில் விளையாட்டுத்தனமாக போலியான தகவல் பரவவிட்டது தெரியவரவே அவரை கைது செய்தனர்.