உள்ளூர் செய்திகள்

ஒளிரும் எதிர்காலம்!

கோடை விடுமுறை முடிந்து திறந்திருந்தது பள்ளி. முதல்நாள், சீருடையைத் தவிர்க்க அனுமதித்திருந்தது, நிர்வாகம். வண்ண உடைகள் அணிந்து, கலகலப்பாக, பட்டாம் பூச்சியாக பறந்து திரிந்தனர் மாணவ, மாணவியர். தலைமை ஆசிரியர், பிரத்யோக உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான கூட்ட அறை நிரம்பி வழிந்தது. முதல் இரண்டு வரிசை இருக்ககைளில், 'ரிசர்வ்' என எழுதிய அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. கடைசி, ஐந்து வரிசை இருக்கைகள் பெற்றோருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.முதல் இரண்டு வரிசைகளில் வந்து அமர்ந்த மாணவ, மாணவியரைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர். கடந்த ஆண்டில் தேர்ச்சி பெறாதவர்களை முன் வரிசையில் அமர வைத்திருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.தேர்ச்சியை தவறவிட்ட இருவர், கடவுள் வணக்கம் பாடினர். பின், ஒலிபெருக்கி முன் வந்தார் தலைமை ஆசிரியர். குழம்பிய முகத்துடன் காணப்பட்டவர்களை தெளிய வைக்கும் வகையில்...'யாரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைய தேவையில்லை. தேர்ச்சியை தவறவிட்ட மாணவ, மாணவியரை வீடு தேடிச் சென்று ஆறுதல் கூறினேன். பெற்றோரோடு கலந்த பேசினேன். தேர்ச்சி பெறாததற்கான காரணத்தை ஆராய்ந்தோம்... 'பொதுவாக கண்டறியப்பட்ட காரணங்கள்... அலைபேசி உபயோகம், தொலைகாட்சி தொடர்களின் தாக்கம் மற்றும் கெட்ட சகவாசம். இந்த மூன்றும் எந்தளவு பாதித்துள்ளது என்பதை தெளிவாக்கினேன்...'இதே தவறு மற்றவருக்கும் ஏற்படலாம் அல்லவா... அதை களைவதற்கான முயற்சியாக, பின்னடைவை சந்தித்தவர்களை முதல் இரு வரிசைகளில் அமர்த்தியுள்ளோம். பின்னடைவுக்கான காரணத்தை அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்... இனியும் யாரும் தோல்வியில் துவண்டு போகக்கூடாது... 'அறிவியல் வளர்ச்சியில் கருவிகள் கூடாது என கூறமாட்டேன்... பெரியவர்களை விட, மாணவ, மாணவியர் தான், அலைபேசியின் உபயோகங்களை தெரிந்து வைத்துள்ளீர்கள். உங்கள் நினைவுத்திறன் அபாரமானது. அதனால் தான் நவீன கருவிகளை, சிறப்பாக பயன்படுத்த முடிகிறது. அதில் செலுத்தும் ஆர்வத்தையும், புத்திசாலித்தனத்தையும் படிப்பிலும் காட்டுங்கள்... 'பள்ளி துவங்கி கல்லுாரி முடியும் வரை, படிப்பதற்கு முதலிடம் கொடுங்கள். ஓய்ந்த வேளைகளில் மட்டும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி செயல்படுங்கள். உடற் பயிற்சிக்காக விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். சைக்கிள் ஓட்டுதல், கயிறு ஆடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு, ஆரோக்கியமாய் இருங்கள்...'சக, மாணவ, மாணவியரோடு உரையாடி, சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்; ஆசிரியர்களை அன்புடன் அணுகி, ஆலோசனை பெறுங்கள். தோல்விகளை படிக்கட்டுகளாக்கி முன்னேறுங்கள்...' வாழ்த்து கூறி விடைபெற்றார் தலைமை ஆசிரியர்.அரங்கமே அதிரும் வகையில் கைதட்டி வரவேற்றனர். அவரது அறிவுரையை பின்பற்ற முடிவு செய்தனர். குழப்பம் முடிவுக்கு வந்தது. செல்லங்களே... தோல்வி ஏற்பட்டால் துவண்டு விடாமல், அதற்கான காரணத்தை கண்டறிந்து களைந்து முன்னேற முயலுங்கள்.கே.அம்புஜவல்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !