உறவுகளால் வந்த வினை!
பரமக்குடி, காளிதாஸ் நடுநிலைப் பள்ளியில், 1970ல், 8ம் வகுப்பு படித்தேன். ஆசிரியை கோமதி நன்றாகப் பாடம் நடத்துவார். பிழையின்றி அழகாக எழுதுவேன். என் நோட்டைப் பார்த்து, 'அச்சடித்தது போல் உள்ள கையெழுத்து, உன் வாழ்வை உயர்த்தும்...' என்று வாழ்த்தினார். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.தேர்வுகளிலும், மிக கவனமாக, அழகாக, விரைவாக எழுதி, ஆசிரியர்களிடம் நற்பெயர் பெற்றிருந்தேன். 10ம் வகுப்புக்கு வந்ததும், 'பெண் பிள்ளையை படிக்க வெச்சு, கலெக்டர் மாப்பிள்ளைக்கா கட்டி கொடுக்கப் போற... இல்ல... மருத்துவம் தான் படிக்க வைக்க முடியுமா... நம்ம தொழில் நெசவுன்னு ஆயிபோச்சு...' என, என் அப்பா மனதை சலவை செய்தனர் உறவினர்கள். மேற்படிப்பை தொடர வழியின்றி நெசவுத் தொழிலில் அமர்ந்தேன். நல்ல மதிப்பெண் எடுத்தும், உறவினர் பேச்சால் அடுத்தவர் தயவில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது என் வயது, 63; உடன் படித்தவர்கள் எல்லாம், நல்ல பணிகளில் இருப்பதைக் காணும் போது மனம் ஏங்குகிறது. - சரோஜா, ராமநாதபுரம்.