உள்ளூர் செய்திகள்

அரிகோ! (1)

தென் அமெரிக்காவில் உள்ளது பிரேசில். பரப்பளவில் யுனைடெட் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்காவை விடப் பெரியது. அங்கு காங்கோனாய் டு காம்போ என்னும் சிற்றூர். மலைப்பாங்கான இடத்தில் இருந்த அழகிய கிராமம் அது. இரும்புச் சுரங்கம் அமைந்த பூமி. அவ்வூர் மக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதே அந்தச் சுரங்கம்தான். வேலை வாய்ப்பை அள்ளித் தந்து கொண்டிருந்தது.அங்கு ஜோஸ் பெட்ரோ டிப்ரை டாஸ் என்றொரு மனிதர். 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி பிறந்தார். இவரது தந்தை அன்டோனியோ டி ப்ரைடாஸ் கோப்ரினோ. சுமாரான குடும்பம். ஜோஸுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அத்தனை பேரும் நன்றாகப் படித்தனர். வழக்கறிஞர், பேராசிரியர், பாதிரியார் என்று பல்வேறு துறைகளில் அவர்கள் ஜொலித்தனர். ஆனால், ஜோஸுக்கு மட்டும் படிப்பு ஏறவில்லை. மூன்றாவது வரை மட்டுமே படித்தார். அப்புறம் கழனியில் வேலை பார்த்தார். பின்னர் சுரங்கத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். அந்த ஊரில் படிப்பு வராத குழந்தைகளைச் சுரங்க வேலைக்கு அனுப்பி விடுவது வழக்கமான ஒன்று.ஜோஸைப் பொருத்தமட்டில் நன்றாக உருண்டு திரண்டு பார்ப்பதற்கு பலசாலியாகத் தெரிவார். முரட்டு சுபாவம் கொண்டவர். அவரது மதமதப் பான தேகத்தைப் பார்த்து அனைவரும் 'அரிகோ' என்று கிண்டலாக அழைத்தனர். 'அரிகோ' என்றால் பூசணிக்காய் என்று பொருள். நாளடையில் இந்தப் பெயரே நிலைத்து விட்டது. அவரது இயற்பெயர் என்ன என்பது அவருக்கே மறந்து போய் விட்டது.அவர் சிறுவனாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிரகாசமான ஒளி வட்டம் அவரது மனக்கண்ணில் தோன்றியது. அத்துடன் ஒரு அசரீரியும் அவருக்குக் கேட்டது.கண்ணைப் பறிக்கும் பிரகாசமான ஒளிவட்டம். அது கூடவே ஏதோ ஒரு அசரீரி. அது புரியாத பாஷையில் இருந்தது என்று தன் நண்பர்களிடம் அதிர்ச்சி கலந்த வியப்புடன் அரிகோ கூறுவதுண்டு.இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது அவரது வாழ்க்கையில் நடந்தது. அப்போது ஒரு சில தினங்களுக்கு அச்சம்பவம் மனதிற்குள் நிழலாடும். பின்னர் மறந்து போகும்.இந்நிலையில் 1943ம் ஆண்டு அர்லடே அண்ட்ரோ என்பவரைக் காதலித்து மணந்தார். இதனிடையே சுரங்கத் தொழிற் சங்கத் தலைவராக இருந்த அவர், அங்கு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் காரணமாக வேலையை விட்டு நீக்கப்பட்டார்.அப்புறம் அங்கு ஒரு ஓட்டல் ஒன்றை நடத்தத் தொடங்கினார். அலயாடினோ சிற்பங்களைக் காண ஆவலோடு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஹோட்டலில் தங்க ஆரம்பித்தனர். வியாபாரம் அத்தனை சூடு பிடிக்கவில்லை என்றாலும் பரவா யில்லை என்று சொல்கிற அளவிற்கு நடந்து வந்தது.அந்தக் காலக்கட்டத்தில் கனவுத் தொல்லை மீண்டும் அவரைப் பாடாய்ப் படுத்தியது. அதில் கேட்ட அசரீரி ஜெர்மன் மொழி என்பது தெரிந்தது. ஆனால், அது என்ன சொல்கிறது என்பது அவருக்கு விளங்கவே இல்லை.இவ்வாறு கனவுகள் அடிக்கடி வந்து தொல்லை தந்ததால் தலைவலி வரத் தொடங்கியது. எனவே, கனவில் இருந்து தப்பிப்பதற்காக இரவு தூங்காமல் கண்விழித்தபடி இருந்து பார்த்தார். ஆனால், எத்தனை நாட்கள்தான் இப்படி தூங்காமலேயே இருப்பது? தலைவலி அதிகரிக்கத் தொடங்கியது.சில நாட்கள் தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மனைவிக்குத் தெரியாமல் நள்ளிர வில், தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார். ஆனாலும் முடியவில்லை. கனவின் தொல்லை காரணமாக அடிக்கடி படுக்கையில் அமர்ந்து அழுவார்.ஒருநாள் இவர் குலுங்கிக், குலுங்கி அழுவதை அவரது மனைவி அர்லடே பார்த்துவிட்டார்.''என்னாச்சு?'' ஏன் அழறீங்க?'' என்று பதறிப் போய் கேட்டாள். அவரது முதுகை ஆதரவாகத் தடவினாள்.மனைவி கேட்டதும் அதற்கு மேலும் மறைக்க இயலாமல் நடந்த அனைத்தையும் கொட்டி விட்டார் அரிகோ. இதனிடையே அவர் கண்ட கனவு சற்று வலுவாகவே அமைந்தது. அதனைக் கனவு என்று சொல்வதை விட கண்முன்னே கண்ட ஒரு உண்மைக் காட்சி என்றே சொல்ல வேண்டும்.ஒரு மருத்துவனையின் ஆபரேஷன் தியேட்டர். உயர்ந்த மேஜையில் ஒரு நபர் படுத்திருந்தார். அவரைச் சுற்றிலும் வெள்ளை உடை தரித்த மருத்துவர்களும், நர்ஸ்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். பல்வேறு உபகரணங் களைப் பயன்படுத்தி அந்த நபருக்கு அறுவைச் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.சற்று கொழு கொழுவென்று வழுக்கைத் தலையுடன் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் தலைமை மருத்துவராக இருக்க வேண்டும். ஏனென்றால், அறுவை சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்தான் அவர் களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.அந்த வழுக்கைத் தலையரின் பேச்சு குரலும் கேட்டது. அதுவும் புரியாத ஜெர்மன் மொழியிலேயே இருந்தது. எனினும் அந்தக் குரல் வழக்கமாகக் கனவில் அவருக்கு அசரீரியாக வந்த அதே குரல் என்பது மட்டும் தெரிந்தது.ஆக, அந்த வழுக்கைத் தலை மருத்துவர்தான் தினமும் அரிகோவின் கனவில் வந்து கொண்டிருக்கிறார்.அப்படியானால் யார் அவர்? அவர் ஏன் கனவில் வந்து தொல்லை கொடுக்க வேண்டும்?இந்தக் கேள்விகளுக்கான பதில் அடுத்த சில தினங்களில் கனவு மூலம் கிடைத்தது.ஆம், பிறிதொரு நாளில் வந்த கனவில் அந்த வழுக்கைத் தலை மருத்துவர் தம்மை முழுமையாகக் காண்பித்தார். தம்மை 'அடால்போ ப்ரிட்ஸ்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். தம்மை மருத்துவர் என்றும் கூறிக்கொண்ட அவர், முதல் உலகப் போரின் போது தான் அகால மரணம் அடைந்து விட்டதாகவும், இதனால் தான் பெரிதும் விரும்பிய மருத்துவ சேவையை தொடர்ந்து செய்ய முடியாமல் போனதாகவும் வருத்தத்துடன் கூறினார். எனினும் தொடர்ந்து சேவை செய்ய விரும்புவதாகவும், அதற்காக அரிகோவின் உடலைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவ தாகும் மருத்துவர் ப்ரிட்ஸ் தெரிவித்தார்.மேலும், நீண்ட காலமாக அரிகோவைத் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், பிறருடன் அரிகோ பழகும் முறை காட்டும் பரிவு, பாசம், தியாக உள்ளம் அனைத்தும் தம்மை வெகுவாகக் கவர்ந்து விட்டதாகவும் ப்ரிட்ஸ் கூறினார்.இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்வதற் காகத் தான் ஏற்கெனவே வேறொருவரின் உடலைப் பயன்படுத்தியதாகவும் ஆனால், அந்த நபர் அதனைத் தனது சுயநலத்திற்காக பயன் படுத்தத் தொடங்கியதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். எனவேதான், வேறொரு நபரைத் தேடி அலைந்ததில் அரிகோவின் செயல்பாடுகள் ஈர்ப்பதாக இருந்ததால் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அந்த மருத்துவர் கூறினார்.அரிகோவைத் தொடர்ந்து பாடாய்ப்படுத்தி வரும் கனவுத் தொல்லையும், அவரது தலை வலியும், மனப் பிராந்தியும் தீர வேண்டுமானால், நோயாளிகளுக்குச் சேவை செய்யும் தனது திட்டத் திற்கு இணங்க வேண்டும் என்றும் அந்த ஆவி வலியுறுத்தியது.யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்வதற்காகத் தான் அரிகோவின் உடலைப் பயன்படுத்த போவ தில்லை என்றும், அரிகோவின் உடலைப் பயன் படுத்தி தீராத நோய்களை எல்லாம் தீர்த்து மக்களை சந்தோஷம் அடையச் செய்வது மட்டுமே தமது நோக்கம் என்றும் மருத்துவர் ப்ரிட்ஸின் ஆவி திட்டவட்டமாகக் கூறியது.இதற்காக அரிகோ பெரிதாக எதுவும் கஷ்டப் படத் தேவையில்லை என்றும், சில நாட்களுக்கு முன் களத்து மேட்டில் தற்செயலாகக் கண்டெடுத்த சிலுவையை நோயாளிகள் முன்பாக தூக்கிக் காண்பித்தாலே போதும், அவர்கள் நோய் குணமாகிவிடும் என்றும் அந்த ஆவி தெரிவித்தது.இந்த சம்பாஷனைகள் அனைத்தும் நிச்சயமாகக் கனவல்ல என்று அரிகோ திடமாக நம்பினார்.திடுக்கிட்டு விழித்தெழுந்த அவர், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் ஓடினார்.-1 தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !