உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

குட்டி துாக்கம்!மதியம் சாப்பிட்டு முடித்ததும், கண்களில் லேசான கிறக்கம் ஏற்படும். அப்படியே, குட்டித் துாக்கம் போட தயாராகும் உடல். ஆனால், அலுவலக நேரத்தில் துாங்கக்கூடாது என மனம் எச்சரிக்கும். அதனால், அருகில் உள்ளவரிடம் பேச்சுக் கொடுப்பது, வீடியோ பார்ப்பது என துாக்கத்திற்கு கடிவாளம் போட முயற்சிப்போம். விமர்சனத்துக்கு பயந்து, மதியம் குட்டித்துாக்கத்தை தவிர்க்க வேண்டாம் என்கிறது ஓர் ஆராய்ச்சி.அதன் முடிவுகள்...* மதிய உணவுக்கு பின் லேசான துாக்கம் உடலுக்கு நல்லது* துாங்கி எழுந்ததும் உற்சாகமாக வேலையில் நேர்த்தியை காட்ட முடியும் * பிரச்னைக்குரிய செயல்களை கூட தீர்க்கும் அளவு மூளை உற்சாகமாகும். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, ப்ரிஸ்டோல் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.இரவில் விழித்து பணி செய்வோர், வாகனம் ஓட்டுவோர், மதியம் குட்டித் துாக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம் என்று பரிந்துரைத்துள்ளது.இதில் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்றுள்ளது. மதிய குட்டித் துாக்க நேரம், 30 நிமிடத்தை கடந்துவிட கூடாது. கடந்தால், நீண்ட உறக்கமாகி ஆரோக்கியத்தை கெடுக்கும்; எனவே கவனமுடன் இருக்கவும்.குடும்ப பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் அன்றாட வேலைகளில் இடைவெளி விடும் வகையில், 30 நிமிடங்கள் வரை துாங்கலாம். முறையாக ஓய்வெடுத்து, புத்துணர்வுடன் வாழ்வை கொண்டாடுவோம்.கடன் அட்டை!கம்பர் படைத்த ராமாயணத்தில், 'கடன் பட்டார் நெஞ்சம் போல, கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சொல்லப் பட்டுள்ளது. கடனை, கலக்கத்துடன் முடிச்சிட்டுள்ளார் அந்த கவிஞர். இது நல்வாழ்வுக்கு சிறந்த படிப்பினை.கடன் இல்லாத மற்றும் நோயற்ற வாழ்வே சிறந்தது. கடனற்ற வாழ்வை, இன்று நினைத்து பார்க்க முடியாது. வரம்பு இன்றி கடன் வாங்கிக் குவிப்பவர், திருப்பி செலுத்த முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகிறார். வாங்கிய கடனுக்கு, வருமானம் முழுவதையும் வட்டியாக செலுத்துகின்றன பல குடும்பங்கள். விலைவாசி உயர்வு, உயராத வருமானம், உயரும் தேவை என பணத்தின் தேவை பல வடிவங்களில் வருகின்றன; இவற்றை பூர்த்தி செய்ய பணம் தேடும்போது, வாழ்வில் நுழைகிறது கடன்.தனிநபர் ஆசை, திருமணம், கல்வி, சுற்றுலா, மருத்துவம், வீட்டு உபயோகப் பொருட்கள் என கடன் வாங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை அனைத்தும் கடன் அட்டையில் பூர்த்தியாகின்றன. ஆனால் சுமையாக அமர்ந்து கொள்கிறது கடன் அட்டை. விற்பனை பிரிவில் வேலை செய்யும் ஒருவருக்கு, பைக் அவசியம். அப்போது தான் அவரது தொழிலில் சாதிக்க முடியும். இந்த தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும் என்றால் அவசியம் கடன் வாங்கலாம். சுற்றுலா செல்ல தனிநபர் கடன் வாங்கினால் சுமை ஏறிவிடும். சிலநேரம் குப்புறத் தள்ளிவிடும். கடன் வாங்கினால், 'வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து விடுகிறோம்' என்று புரிந்து கொள்ள வேண்டும். கடன்படாது வாழும் வகையில், வரவு - செலவை வகுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !