அவசரம் தவிர்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 9ம் வகுப்பு படித்தேன். உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் நடராசன். மிக திறமையானவர். ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.பள்ளி வளாகம் எப்போதும் துாய்மையாக இருக்க வேண்டும் என்று பாடுபடுவார்.ஒருநாள் விளையாட்டு வேளை முடிந்து வகுப்பறைக்கு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது வீசிய பலத்த காற்றில் பள்ளி வளாகத்தில் நின்ற மரத்தின் கிளை முறிந்து தொங்கியது. உடனே, அதை இழுத்து ஓரமாக போட்டு விடலாம் என்று முயன்றேன்.இதை கவனித்த உடற்கல்வி ஆசிரியர், 'எப்போதும் ஆக்கபூர்வமாக செயல்பட முயற்சி செய். அவசரமாக முடிவு எடுக்காதே...' என அறிவுரைத்து, அந்த கிளை முறிந்து விடாமல் கயிறால் கவனமுடன் கட்டினார். முறிவு பகுதியில், மாட்டு சாணம், மண் கலவை பூசி பாதுகாத்தார்.சில நாட்களுக்கு பின், மரத்துடன் சேர்ந்த கிளை, துளிர்த்து நன்கு வளர்ந்திருந்தது. ஆச்சரியத்துடன் நல்ல பாடம் கற்றேன்.என் வயது 71; அரசு பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த உடற்கல்வி ஆசிரியர் அன்று கூறிய அறிவுரை இன்றும் மனதில் ஒலித்தபடியே இருக்கிறது. முடிந்தவரை வாழ்வில் அதை பின்பற்றுகிறேன்.- ரா.வசந்தராஜன், கிருஷ்ணகிரி.தொடர்புக்கு: 63805 37510