உள்ளூர் செய்திகள்

மூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டிய பென்டிங்க்!

ஐரோப்பா கண்டம், இங்கிலாந்து பிரதமராக இருந்த, வில்லியம் ஹென்றியின் மகன், வில்லியம் பென்டிங்க். இந்திய கவர்னர் ஜெனரலாக, 1828ல் பதவி ஏற்றார். ஏழு ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். இவர் பதவி ஏற்ற காலத்தில், கொடிய பழக்க வழக்கங்களும், மூட நம்பிக்கைகளும், இந்தியாவின் பல பகுதிகளில் நிலவின.கணவர் இறந்தவுடன், மனைவியை உடன்கட்டை ஏற்றும் கொடிய பழக்கமும், அதில் ஒன்று. மேற்கு வங்கத்தில் பிறந்த, ராஜாராம் மோகன்ராய், இதை ஒழிக்க கடுமையாக போராடினார். இந்த தீய பழக்கத்துக்கு, 'சதி' என்று பெயர். டிச., 4, 1829ல், இதை சட்டம் இயற்றி ஒழித்தார், பென்டிங்க். விதவை பெண்களை, எரிக்கவோ, புதைக்கவோ முயன்றால், கொலை வழக்கு பதிந்து, தண்டனை வழங்க, அந்த சட்டம் வகை செய்கிறது. இதே போன்று, பெண் குழந்தைகள் பிறந்தவுடன், கொல்லும் மூடப்பழக்கமும் அந்த காலத்தில் நிலவியது. பெண் குழந்தைகளை பாரமாக கருதிய பெற்றோர், பிறந்தவுடன் கொல்லும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இதை தடுக்க, பெண் சிசுவதை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தால், பெண் குழந்தைகளை கொல்லும் கொடூரம், ஓரளவு தடுக்கப்பட்டது. இவரது ஆட்சி காலத்தில், கொள்ளை அடிப்பதை, சடங்காக, சில பகுதி மக்கள் செய்து வந்தனர். வழி போக்கர்கள், வியாபாரிகளிடம் கொள்ளையடித்து, கொலை செய்யும் சம்பவங்கள், ஏராளமாக நடந்தன. இதை ஒழித்து கட்ட, கடும் உத்தரவுகளை பிறப்பித்தார் பென்டிங்க். தகுதியான அதிகாரியை நியமித்து ஆய்வு செய்தார். ஆங்கிலேய அதிகாரி, வில்லியம் ஸ்லீமன் தலைமையில், ஒரு குழுவை நியமித்தார். கொள்ளைக் கும்பல்களைக் கண்காணித்து, பிடிக்க, தேவையான உதவிகளை செய்தார். அந்த குழுவினர், 2000க்கும் மேற்பட்ட, கொள்ளையர்களை கைது செய்தனர். அதில் பலர் நாடு கடத்தப்பட்டனர்; பலர் துாக்கிலிட்டு கொல்லப்பட்டனர். கொள்ளையர் அட்டகாசம் அடங்கியதால், மக்கள் நிம்மதியடைந்தனர்.இமயமலையில் சிம்லா, நீலகிரியில் ஊட்டி, மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் போன்ற, மலை வாசஸ்தலங்களை சீரமைத்தார்.மிகவும் மனிதாபிமானத்தடன் செயல் பட்டார். இவரது ஆட்சி காலத்தில் தான், நீதிமன்றங்களில், இந்தியர்களை கீழ்மட்ட நீதிபதிகளாக நியமிக்கும் வழக்கம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !