உள்ளூர் செய்திகள்

மருமகள்!

வசந்தி இரக்க சுபாவம் கொண்டவள். அவள் சிறுவயது முதலே சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து வந்தாள். அவளது தாயார் அவள் சிறுமியாக இருக்கும்போதே இறந்து போனாள். அவளது தந்தை மறுமணம் செய்து கொண்டார். வந்தவளோ வசந்தியின் செயல்களில் எந்தவித குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்க முடியாது போனாலும், அவளுக்குச் சரியாக சாப்பாடு போடாமல் இருந்தாள். வசந்தி கவலைப்பட வில்லை. ஏனெனில், மற்றவர்கள் அவள் தமக்கு செய்யும் வேலைகளுக்காக உணவு கொடுத்து வந்தனர்.இப்படி இருக்கையில், ஒருமுறை அவளது மாற்றாந்தாய் சீதா தன் பிறந்த வீட்டில் யாருக்கோ கல்யாணம் என்று தன் கணவனையும் அழைத்துச் சென்றுவிட்டாள். போகும் போது வசந்தியிடம், ''வீட்டைப் பார்த்துக் கொள். ஜாக்கிரதை,'' என்று எச்சரித்து விட்டுப் போனாள்.அன்றிரவு காற்றும், மழையுமாக இருந்தது. அதனால் ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடி விட்டு வாசல் கதவைச் சாத்தி மூட வசந்தி வந்தாள். ஆனால், வீட்டுத் திண்ணையில் யாரோ படுத்திருப்பதைக் கண்டு, 'யாரது?'' என்று கேட்டாள்.பதில் எதுவும் வராததால் அருகில் சென்றுப் பார்த்தாள்.யாரோ ஒருவர் ஈரத்துணிகளுடன் படுத்து முனகிக்கொண்டிருந்தார். வசந்தி அவரைத் தட்டி எழுப்ப முயன்றபோது, அவரது உடல் அனலாய் கொதிப்பதைக் கண்டாள். அவரை எழுப்பி, அவர் வைத்திருந்த மூட்டையோடு வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். அவரது ஈர ஆடைகளை களைந்து விட்டு, ஒரு உலர்ந்த துண்டால் அவரது உடலைத் துடைத்தாள். பிறகு அவள் அவரது மூட்டையி லிருந்து ஆடைகளை எடுத்து அணிவித்து விட்டுக் கட்டிலில் படுக்க வைத்தாள். கொஞ்சம் சூடான பாலைக் கொடுத்து குடிக்க வைத்த அவள், ''நான் போய் வைத்தியரை அழைத்து வருகிறேன். இங்கேயே படுத்திருங்கள்,'' என்று கூறி விட்டுப் போனாள்.சற்று நேரத்தில் திரும்பி வந்த அவள், ''வைத்தியர் ஜுர மாத்திரை கொடுத்திருக்கிறார். இதைச் சாப்பிட்டால் உடம்பு சரியாகி விடும்,'' என்று கூறி மாத்திரையை சாப்பிட வைத்தாள்.சற்று நேரத்திற்குப் பின் அவர் ஜுரம் தணிந்தது. அவர் எழுந்து உட்கார்ந்து வசந்தியைப் பார்த்து, ''நீ யாரம்மா? இவ்வளவு பரிவுடன் பிறருக்கு உதவி செய்கிறாயே. நீ நன்றாக இருக்க வேண்டும்,'' என வாழ்த்தினார்.'என் பெயர் வசந்தி,'' என்று தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறினாள்.அதன் பின் அவர் படுத்துத் தூங்கினார். வசந்தியும் படுத்துத் தூங்கிவிட்டாள். காலையில் அவள் எழுந்தபோது, அந்த மனிதன் தன் துணிமணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார்.அவர் வசந்தியிடம், ''நீ யார் என்று என்னிடம் சொன்னாய். ஆனால், நான் யார் என்று நீ கேட்கவில்லையே. என் பெயர் ரங்கசாமி. பட்டணத்தில் எனக்கு ஐந்து கடைகள் உள்ளன. என் நண்பன் ஒருவனைப் பார்க்க வந்த வழியில், இப்படி ஜூரத்தில் படுத்து விட்டேன். என்னை நீதான் காப்பாற்றினாய். உன்னை நான் மறக்கவே மாட்டேன். உனக்கு என்னாலான உபகாரம் செய்வேன். இதுதான் என் முகவரி. நீ எப்போது வேண்டுமானாலும் என்னுடன் தொடர்பு கொண்டு உதவியைப் பெறலாம்,'' என்று கூறித் தன் முகவரியை ஒரு காகித துண்டில் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார்.இது நடந்து பத்து ஆண்டுகள் சென்றன. வசந்தியும் வளர்ந்து விவாக வயதை அடைந்து விட்டாள். அந்தப் பத்தாண்டு காலத்தில் சில சம்பவங்கள் நடந்தன. வசந்தியின் மாற்றந்தாய் இறந்து விட்டாள். வசந்திக்கு அவள் தாத்தாவிடமிருந்து எதிர்பாராத விதமாய்க் கணிசமான சொத்துக்கள் கிடைத்தன.ஒரு கோடை கால மத்தியானம் சாப்பிட்டு விட்டுத் தன் வீட்டுத் திண்ணைக்கு வந்தாள் வசந்தி. அங்கு எண்பது வயதான ஒரு கிழவர் முக்கி முனகியவாறே படுத்திருப்பதை அவள் கண்டாள்.அவள் கிழவரை எழுப்பி கையைப் பிடித்து மெதுவாகத் தன் வீட்டிற்குள் அழைத்துப் போய் கட்டிலில் படுக்க வைத்தாள். அவருக்குக் குடிக்க நீர், மோர் கொடுத்து , ''வயதான நீங்கள் இப்படி வெயிலில் வரலாமா?'' என்று கேட்டாள்.அவரும், ''நான் ஒரு முக்கியமான வேலையாக இந்த ஊருக்கு வந்தேன். என் மகன் ரங்கசாமி பட்டணத்தில் ஐந்து கடைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகிறான். இந்த ஊரில் அவனுக்கு வரவேண்டிய பணத்தை வசூலித்து வரும்படி என்னை அனுப்பினான். இன்று மாலைக்குள் நான் வசூலித்த இந்தப் பணத்தை அவனிடம் எப்படியாவது சேர்த்தாக வேண்டும். அப்படி செய்யாவிட்டால் என்னை வாட்டி வதக்கி விடுவான்,'' என்றார்.அதைக் கேட்ட வசந்தி ஏதோ நினைத்துக் கொண்டவள் போல, உள்ளே போய் தன் பெட்டியிலிருந்து ஒரு காகிதத் துண்டை எடுத்து வந்தாள். அதனை அவள் அப்பெரியவரிடம் காட்டி,' இதுதான் உங்கள் மகன் ரங்கசாமியின் முகவரியா?'' என்று கேட்டான்.பெரியவரும் அதனைப் பார்த்து விட்டு, 'ஆமாம். இது எப்படி உனக்குக் கிடைத்தது?'' என்று கேட்டார். வசந்தியும் பத்து வருடங்களுக்கு முன் நடந்ததை அவரிடம் கூறினாள்.அவரும், ''அப்படியா? சரி. இனி நான் சென்று வருகிறேன்,'' என்றார்.'பெரியவரே! உங்கள் மகன் சரியாக கவனித்துக் கொள்வது இல்லை என்று உங்கள் பேச்சிலிருந்து தெரிகிறது. இந்த நிலையிலும் நீங்கள் உங்கள் மகனோடு இருந்துதான் தீரவேண்டுமா?'' என்று கேட்டாள்.பெரியவரும், ''அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெற்ற மகனே, என்னை கவனிக்காத போது வேறு யார்தான் என்னைப் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்?'' என்று பெருமூச்சு விட்டவாறே கூறினார்.''அப்படியானால் நான் சொல்வதைக் கேளுங்கள். இப்போது இங்கே சாப்பிட்டு விட்டு இளைப்பாறுங்கள். மாலையானதும் நானும் உங்களோடு பட்டணத்திற்கு வருகிறேன். உங்கள் மகனிடம் நல்ல விதமாய் சொல்லி உங்களைச் சரியாக கவனித்துக் கொள்ளும்படி சொல்லிப் பார்க்கிறேன். அவர் கேட்டால் சரி, இல்லாவிட்டால் நீங்கள் என்னோடு திரும்பி வந்து விடுங்கள். இங்கே நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். எனக்கும் ஒரு பெரியவரின் துணை கிடைத்து போலாகி விடும்,'' என்றாள்.மாலையானதும் வசந்தியின் தந்தை வீட்டிற்கு வந்தார். பெரியவர் அவரிடம், வசந்தி தனக்குச் செய்த உபசாரத்தையும், அவள் யோசனையையும் கூறினார்.'அவள் கூறியபடியே செய்யுங்கள். எல்லாம் நல்ல விதமாக நடக்கும்,'' என்றார் வசந்தியின் தந்தை.பெரியவர் வசந்தியையும், அவளது தந்தையையும் அழைத்துக் கொண்டு பட்டணத்திலுள்ள தன் மகன் ரங்கசாமியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் ரங்கசாமியைப் பார்த்து சிரித்தவாறே,'' ரங்கசாமி இதோ பார். என் பேத்தியை அழைத்து வந்திருக்கிறேன்,'' என்றார்.ரங்கசாமியும், வசந்தியைப் பார்த்து ''என்னைத் தெரிகிறதா?'' என்று கேட்டான்.''ஓ! நன்றாக நினைவில் இருக்கிறதே,'' என்றாள் வசந்தி.அப்போது அங்கு இருபத்தைந்து வயதான அழகான வாலிபன் ஒருவன் வந்தான்.ரங்கசாமியும், ''இவன் என் மகன் மூர்த்தி,'' என்றான்.மூர்த்தியை, ரங்கசாமி போகச் சொல்லி விட்டு வசந்தியிடமும், அவள் தந்தையிடமும், 'என் தந்தை ஒரு சிறு நாடகமே நடத்தி விட்டார். என்ன விழிக்கிறீர்களா? நான் பத்து வருடங்களுக்கு முன் வசந்தியைப் பார்த்தேன். அவளது அமைதியான போக்கும், பிறருக்கு இரங்கும் இயல்பும் கண்டு நான் மகிழ்ந்து போனேன். மூர்த்தி என் ஒரே மகன். என் மனைவியும் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டாள். அவளும் வசந்தியை போன்ற இயல்புள்ளவளே. அவளைப் போன்ற மருமகளை அடைய வேண்டும் என்பதே என் ஆசை. இன்னமும் வசந்தி முன் போலவே இருக்கிறாளா? என்று என் தந்தை பரீட்சித்தார். அவர் திருப்தி அடைந்தே உங்கள் இருவரையும் அழைத்து வந்திருக்கிறார். வசந்திக்கு என் மகனைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டம்தானே? உங்கள் அபிப்ராயம் என்னவோ?'' என்று கேட்டார்.''உங்கள் அபிப்பிராயப்படி நடக்கலாம். வசந்தி! நீ என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.அவள் பதில் எதுவும் சொல்லாமல் வெட்கித் தலைகுனிந்து கொண்டாள்.ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !