உள்ளூர் செய்திகள்

குள்ளனும் நொண்டி குதிரையும் (1)

கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு பரந்த பாலைவனத்திற்கு ஈடாக சுத்தமாக புல்பூண்டு ஏதுமின்றி மிக அடர்த்தியான ஒரு விபரித மவுனம் நிலவிய இடம் அது. மனித சஞ்சாரமே அற்ற அந்த பரந்த பாலைவனத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய குடிசை.அந்த சிறிய குடிசையில், ஒரு வயதான கிழவியும் ஒரு அழகிய பெண் மட்டுமே வசித்து வந்தனர். அந்த வயதான கிழவி வாயைத் திறந்து இன்றுவரை ஒரு வார்த்தைக்கூட பேசியதே இல்லை. அந்தப்பெண் ஒரு இளவரசி. அது கூட அவளுக்குத் தெரியாது. இளவரசிக்குத் துணை... எங்கேயோ பல மைல்களுக்கு அப்பாலுள்ள கடலில் ஒங்கார ஒசை மட்டுமே, இந்த ஒசையை கேட்டு வந்த புதிதில் மிகவும் பயப்படுவாள். ஆனால், கால ஓட்டத்தில் இந்த ஓசை மட்டுமே, தனக்குத் துணை என்று மனதை தேற்றிக் கொண்டு அந்த ஓசைக்கு இணையாக ஏதேனும் பாட்டை முணுமுணுப்பாள்.நாள் முழுவதும் குடிசை வாசலில் உட்கார்ந்து கொண்டு நீல ஆகாயத்தையும் அதில் உலாவரும் சூரியனையும்,இரவு நேரங்களில் ஆகாய கூரையில் ஜொலிக்கு நட்சத்திரங்களையும் கூப்பிட்டு, ''என்னுடன் பேசுங்களேன்... என் பாட்டை கேளுங்களேன்'' என்று கெஞ்சிக் கெஞ்சியே தன் நாட்களை ஓட்டி வந்தாள் அந்த இளவரசி லிசா...மாதம் ஒருமுறை, ஒரு ஊமை குள்ளன் இவர்களின் சாப்பாட்டிற்கு தேவையான பொருட்களை ஒரு நொண்டிக் குதிரையின் மேல் ஏற்றி வருவான். அவனைக் கண்டதும் அந்த கிழவி ஓடிவந்து அவன் கையிலுள்ள மூட்டையை பறித்து கொண்டு, ''உம்,உம் சீக்கிரம் போய்விடு... இங்கே நிற்காதே,'' என்று ஊமை பாஷையில் காச்முச் சென்று கத்துவாள்.ஆனால், இளவரசி லிசா, இவனைப்பார்த்து மிகவும் சிநேகமாக புன்னகைப்பாள். அவன் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? இதைப் பார்த்துவிட்ட அந்த கிழவி ஒரு கம்பை எடுத்து வந்து அவனை அடிக்க வருவாள். இளவரசி அவனைப் பார்த்து,''ஓடிவிடு,''என்று சைகை செய்ய, அவனும் தன் நொண்டிக் குதிரை மீதேறி போய்விடுவாள்.இளவரசியைப் பார்க்க, பார்க்க அவன் மனம் வெதும்புவான். இந்த அழகிய பெண்ணை எப்படியாவது அவ்விடத்திலுருந்து கிளப்பி சென்று விட வேண்டுமென்று நினைப்பான். பாவம் அது எப்படி அவனால் சாத்தியமாகும். மனமெல்லாம் ஒரே துக்கம். இரவு முழுவதும் தூங்காமல் எப்படியாவது அப்பெண்ணிற்கு உதவவேண்டும் என்று, கடவுளை வேண்டிக் கொள்வான்.அன்று அவர்களின் சாப்பாட்டிற்கு தேவையான பொருட்கள் எடுத்துச்சென்றான். வழக்கமாக லிசா உட்கார்ந்திருக்கும் இடத்தில் லிசாவைக் காணவில்லை. பதறிப் போனவன், கிழவியிடம் தன் பாஷையில், ''லிஸா எங்கே?'' என்று கேட்க அவள் வழக்கப்படி காச் மூச்சென கத்திக் கொண்டே கம்பால் அவனை விரட்டி அடிக்க, வேறு வழியின்றி கனத்த இதயத்துடன் தன் நொண்டி குதிரை இருக்கும் இடத்தை அடைந்தபோது, அங்கே குடிசையின் பின்பக்கம் லிசா அழுது கொண்டே இருப்பதைக் கண்டதும், ஏதோ ஒரு துணிச்சலில் ஓடிச்சென்று அவளின் கரங்களைப் பற்றி, ''நீ அழாதே... உன்னை நான் காப்பாற்றுவேன்.'' என்று சொல்லி விட்டு புறப்பட்டான்.கலங்கிய மனதுடன் குதிரை அருகே சென்றவன் அதன் மேல் ஏறாமல், அதன் போக்கிலேயே செல்லவிட்டான். அக்குதிரை இக்குடிசைக்கு பின்புறம் மிக வெகு தூரத்திலுள்ள மலை அடிவாரத்திற்கு சென்றது. அட! இங்கு நான் எப்படி வந்தேன் அவன் திகைக்கையில், ''ஏய் குள்ளனே! அப்படி நினைக்காதே... நீ வந்து சேர வேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய்''என்று அசரிரீயாக ஒரு குரல் ஒலிக்க... இக்குரல் எங்கிருந்து வருகிறது என்று குழம்பியவன் நாலபுறமும் திரும்பித்திரும்பி பார்த்தான்.ஏய்! குள்ளனே! திரும்பாதே நிமிர்ந்துப்பார் என்றதும், தலையை நிமிர்த்தி பார்க்க... அங்கே அந்த மலை முகட்டில் இவனை விட குள்ளமான ஒருவன், பித்தளை பொத்தான்கள் பளபளக்கும் பச்சைநிறக்கோட்டும், சிவப்பு நிற ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய தொப்பியுடன் நின்று கொண்டிருந்தான்.''ஏய்! குள்ளா! நீ வரவேண்டிய இடத்திற்கு தான் வந்திருக்கிறாய். இங்கே வா...'' என்று இரண்டாம் முறையாக அவன் கூற... இவனும் அந்த பச்சை உடை குள்ளனின் அருகில் சென்றான்.''நல்லது... இனி உனக்கு பேசும் திறனை நான் கொடுக்கிறேன். உன்னிடம் எனக்குப் பேச வேண்டியது நிறைய இருக்கிறது என்னுடன் வா'' என்றான்.மறுபேச்சின்றி குள்ளனும் அவனை பின் தொடர்ந்தான். ஒரு சிறிய குகை... அதற்குள் தவழ்ந்து தான் செல்ல முடியும். அதன்படியே பச்சை நிற உடை அணிந்தவரை தொடர்ந்து இவனும் சென்றான்.அதன் பின் நாலைந்து படிகள் கீழே இறங்கினால், ஒரு மிகப்பெரிய சலவைக்கல் ஹால். மிக விலை உயர்ந்த பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தங்கத்திலான தூண்கள். சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த வைரங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன. ஹாலின் நடுவில் ஒரு சாப்பாட்டு மேஜை வெள்ளியால் ஆனது. அதில் இரண்டு தங்கத்திலான சாப்பாட்டு தட்டுக்கள், ஸ்பூன். தங்கத்திலான நாற்காலியை இழுத்துப்போட்டு,'' உட்காரு,'' என்றான்.இன்னும் பிரமையிலிருந்து விடுபடாத குள்ளன் மறுபேச்சின்றி உட்கார்த்தான்.மேஜை மேலிருந்த வெண்கல மணியை எடுத்து அடித்ததும், உள்ளேயிருந்து ஒரு குள்ளன் வந்தான். ''டேய்! அலமாரியிலிருந்து என் பேசும் சக்தி கொண்ட மந்திரக்கோலை கொண்டு வா'' என்றதும், மூன்று முறை குனிந்து அவனை வணங்கி விட்டு, பின்புறமாகவே நடந்து உள்ளே போய், ஒரு வெள்ளித்தட்டில், தங்கத்தினால் ஆன ஒரு ஊதுகுழல், அதில் கண்களைப்பறிக்கும் மூன்று இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதனை எடுத்து வந்த குள்ளன் தன் எஜமானரிடம் அதனை கொடுத்த பின்னர் மூன்று முறை குனிந்து அவனை வணங்கி, பின்புறமாகவே உள்ளே சென்றுவிட்டான். தன் கையிலிருந்த அந்த தங்க தடியால் தன் முன் உட்கார்த்திருக்கும் குள்ளனை நிற்கச் சொல்லி மூன்றுமுறை அவன் வலது தோளிலும்... மூன்றுமுறை அவனின் இடது தோளிலும் தட்டிவிட்டு, பின்னர் அந்த ஊது குழலில் பதித்திருந்த இரத்தினகற்கள் மூன்றுமுறை நாவால் நீவச்சொன்னான். அவள் நீவிக் கொண்டிருக்கும் போதே...''உம். பேசு, உம் பேசு, இப்போ உன்னால் பேச முடியும், நீ இனி ஊமை அல்ல'' என்று சொன்னதும். திடீரென அவன் பேச ஆரம்பித்து விட்டான். அவனால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்கு பேசும் சத்தி வந்து விட்டது என்று உரக்கச் கூவிக்கூவி குதித்தான்.''சரி இப்போது சொல் நீ யார்?'' என்றாள் அங்குள்ள தேவதை.''எனக்கு தெரியவில்லை,''என்றான் மிகவும் பரிதாபமாக,''சரி நீ பசியோடு இருக்கிறாய், முதலில் நாம் சாப்பிடுவோம்... அப்புறம் நிதானமாக யோசித்து பதில் சொல்''என்றது தேவதை. முதலில் தங்கத்தட்டுகளில் இரண்டு வேக வைத்த நத்தைகள், அப்புறம் வேகவைத்த சுண்டெலிகள், இரண்டு கோழிகுஞ்சுகள் இந்த சாப்பாடு முடிந்ததும் மிக உயர்ரக ஒயின் கொடுத்தது.''சரி, வயிறு நிரம்பி விட்டதல்லவா? இப்போது சொல். நீ யார்?''''ஐயா! என்னை மன்னித்துத்துடுங்கள். சத்தியமாக நான் யார் என்பதே எனக்கு தெரியாது.'' ''சரி உன்னைப்பற்றி, உன் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஒரு சிறிய சம்பவமாவது உனக்கு நினைவிருந்தால் சொல்லேன், சிறிது நேரமானாலும் பரவாயில்லை. ஒரு சின்னஞ்சிறிய துப்புக்கொடுத்தால் போதும், நீ யார் என்பதை நான் கண்டுப்பிடித்து விடுவேன்... கம் ஆன் ட்ரை ''(-1தொடரும்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !