காது கவனம்!
உலகில் சத்தமே இல்லையென்றால்... சற்று யோசியுங்கள்.புலனுணர்வு கருவிகளில் முக்கியமானது காது. மிகவும் நுட்பமான உறுப்பு. பத்திரமாக பராமரிக்க வேண்டும். செவித்திறன் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் உலகில் ஏராளம். செவித்திறனுக்கும், பேச்சுக்கும் தொடர்பு உண்டு. எனவே, குழந்தை வளரும் போது, இரண்டு திறன்களையும் கவனிக்க வேண்டும். பேசுவதிலோ, படிப்பிலோ, கேட்பதிலோ குறையிருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.காது செயல்படும் விதம், பல்லாயிரம் கணினிகளை இணைத்துள்ளதற்கு சமம். அதன் உள்ளமைப்பு வினோதமானது. உள்புறம் ஒரு அங்குல நீளத்துக்கு குழாய் போன்று இருக்கும். இதில், மெழுகு போன்ற, ஒருவித கடின திரவம் சுரக்கும். அதற்காக ஏராளமான சுரப்பிகள் இருக்கின்றன. இந்த திரவம்தான், துாசி, அழுக்கு, அசுத்தம் போன்றவை காதின் உள்ளே செல்லாமல் தடுக்கிறது.காதின் நடுப்பகுதியில், மெல்லிய ஜவ்வு போன்ற தடுப்பு உள்ளது. இது செவிப்பறை எனப்படுகிறது. காற்றில் மிதந்து வரும் ஒலி அலைகளை உள்வாங்கி, மூளைக்கு அனுப்பும் பணியை செய்கிறது. அனிச்சையாக சிலர் காதுகளில் எதையாவது விட்டு குடைந்து கொண்டிருப்பர். அது ஜிவ்வென்று ஒருவகை மயக்கத்தை தரும். இதற்கென்றே நேரம் ஒதுக்கி, காது குடைவோரும் உண்டு. பிரபல எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன், ஒரு கதையில் இது பற்றி மிகவும் சுவாரசியமாக வர்ணித்துள்ளார்.காது பராமரிப்பில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.* காது குடைய பயன்படுத்தும், ஹேர்பின், தீக்குச்சி, சேப்டிபின் போன்றவை செவிப்பறை ஜவ்வில் ஓட்டை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அப்புறம், கேட்காது என்ற நிலை ஏற்பட்டுவிடும் * சிகரெட் புகை, சிலவகை அலோபதி மருந்துகள் காதில் மெல்லிய நரம்பை பாதிக்கும்* அதிக சத்தத்தடன் பட்டாசு வெடிக்கும் போது காதை மூடிக் கொள்வது நலம்* நவீன கருவிகளை காதில் பொருத்தி இசை கேட்பது ஆபத்தில் முடியலாம், எனவே எச்சரிக்கையுடன் இருங்கள்* சுத்தம் செய்வதாக கருதி, மயிலிறகு, பட்ஸ் போன்றவற்றால் குடைவது தவறானது. உள்பகுதி ஜவ்வில் உராய்வு ஏற்பட்டால் ஓட்டை விழுந்து, சீழ் வடியக் கூடும். காதுகளில் துாசு விழுந்தால் தானாகவே வெளியேறி விடும். பாரம்பரிய முறையில் காதை சுத்தம் செய்வதாக அலையும் கும்பலிடம் கவனமாக இருங்கள். தவறினால், கேட்கும் திறனை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.கதையும் காதும்!கேட்கும் திறனின் முக்கியத்துவம் பற்றி பல்லாயிரம் பழங்கதைகள் உண்டு. தமிழகத்திலும் வாய்மொழியாக வழங்கி வருகின்றன. 'காதுகள்' என்ற தலைப்பில் ஒரு புதினம் தமிழில் வெளிவந்துள்ளது. பிரபல எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் எழுதியுள்ளார். இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றது. காதுக்குள் கேட்கும் வினோத ஒலி பற்றியே, கதையின் முழுப்பகுதியும் பின்னப்பட்டுள்ளது.