முதல் சாப்பாடு!
மெய்யூர் என்ற கிராமத்தில் சரத்பாபு என்ற செல்வந்தர் தம் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறாள். சிறு வயதில் காலமான தன் மகன் நினைவாக, அன்ன சத்திரம் ஒன்று கட்டி, அதில் தினம் ஐம்பது சிறுவர் சிறுமியருக்கு, காலையும், இரவும் சாப்பாடு போட்டு வந்தார்.ஆனால், அவரது ஒரு நடத்தை மட்டும் யாருக்கும் புரியாததாக இருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு சிறுவர்களுக்குச் சாப்பாடு பரிமாறப்படும்.இவர் காலை 8.30 மணிக்கே தம் மனைவியுடன் வந்து, நேரே சமையறையக்கு செல்வார். சாதம், குழம்பு, ரசம், கறி, மோர் என ஒவ்வொன்றிலும் கொஞ்சம் எடுத்து, இவரும் இவர் மனைவியும் இலையில் போட்டு சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடித்ததும் மனைவியுடன் சென்று விடுவார். இரவும் இதே மாதிரிதான்.சிறுவர்களுக்கு 7.30 மணிக்கு சாப்பாடு போடப்படும். 7 மணிக்கு சரத்பாபுவும் அவருடைய மனைவியும் வந்து,காலை மாதிரியே சாப்பிட்டு விட்டுத் திரும்புவர். எல்லாருக்கும் இவர்களது செய்கை விந்தையாக இருந்தது.ஒருநாள் அவரது காரியஸ்தர், ''அய்யா சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளக் கூடாது, சாப்பாட்டுத் தர்மம் என்பது, மற்றவர்கள் சாப்பிட்ட பின் நாம் சாப்பிடுவதுதான் முறை. ஆனால் , நீங்கள் செய்வது தர்ம சாஸ்திரத்திற்கு எதிராக உள்ளதே!'' என்றார்.இதைக் கேட்ட சரத்பாபு சிரித்து விட்டுச் சொன்னார்.''காரியஸ்தரே... சாப்பாடு சிறுவர்களுக்குச் செய்யப்படுகிறது. சிறுவர்கள்தானே என்ற அலட்சியத்தில், சமையற்காரன் சாமான்களைக் குறைத்தும் போட்டுச் சுவையின்றி உணவு சமைப்பர். காய்கறிகளைச் சரியாக வேக வைக்க மாட்டார்கள். இப்போது அவர்களுக்கு முன் சிறுவர்களுக்குச் சமைத்த உணவை நாங்கள் சாப்பிடுவதால், முதலாளியும் இதைத்தான் சாப்பிடுகிறார் என்ற எண்ணத்திலும் பயத்திலும் கவனமாக செய்வர். இதனால் மாணவர்களுக்கும் நல்ல சாப்பாடு தொடர்ந்து கிடைக்கும். அதனால் தான் நாங்களே எடுத்துக் வைத்துக் கொண்டு அவர்களுக்கு முன்பாகவே சாப்பிடுகிறோம், '' என்றார்.காரியஸ்தரும், மற்றவர்களும், 'அடடே, இவர்களின் செயலுக்குத் தவறான எண்ணம் கொண்டிருந்ததோமே,! என்று நினைத்து வெட்கப்பட்டனர்.***