பரிசுக்குரியவன்!
வகுப்பு தேர்வில் முரளியும், வாசுவும் முதல், இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவர்கள்.மாதாந்திர தேர்வில் முரளி முதல் மதிப்பெண் வாங்கினால், மறுமுறை வாசு வாங்குவான். போட்டி போட்டு படித்தனர். ஆனால், மனதில் வன்மம் வளர்ந்திருந்ததால் எதிரிகளாக இருந்தனர்.ஆண்டு விழா திட்டமிடலின் போது, 'முதல் மாணவனுக்குரிய பரிசை யாருக்கு வழங்குவது...' என ஆலோசித்தார் வகுப்பாசிரியர். பலரிடமும் இது பற்றி பரிந்துரைகள் கேட்டார்.அப்போது அங்கு வந்த முரளி, ''ஐயா... படிப்பில் இந்த நிலைக்கு, நான் உயர காரணம் வாசு தான்...'' என்று கூறினான். புரியாமல், ''என்ன சொல்கிறாய். நீங்கள் இருவரும் எலியும், பூனையும் போல் இருக்கிறீர்களே...'' என்றார். ''ஐயா... முதல் மாதாந்திர தேர்வில், வாசு நான்காம் இடத்தில் இருந்தான். அவனை முந்த வேண்டும் என்ற ஆர்வத்தில் அடுத்து வந்த தேர்வில் நான், மூன்றாம் இடத்திற்கு முன்னேறினேன்; அதற்கடுத்து என்னை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்தை அடைந்தான்; தற்போது, நான் முதல் இடத்தில் உள்ளேன். போட்டி போட்டு, என் திறமையை வெளிக்கொணர வைத்த பெருமை வாசுவையே சேரும்; அவனே பரிசுக்குரியவன்...'' என்றான் முரளி.அதை ஏற்றுக்கொண்டார் வகுப்பாசிரியர். இதை அறிந்த உடன், எதிரியாக இருந்த வாசு, மனம் மாறி நண்பன் ஆனான்.குழந்தைகளே... போட்டி போட்டு படித்தால் வாழ்வில் முன்னேறலாம்!- பி.கனகராஜ்