கண்ணாடித் தலையன்! (1)
முன்னொரு காலத்தில் ஜனனி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு ஒரே ஒரு பிள்ளை இருந்தான். அவன் மகா சோம்பேறி. அவன் பொழுதெல்லாம் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து போவோர், வருவோரை வேடிக்கை பார்ப்பான். இப்படிச் சோம்பேறியாக வளர்ந்த அவனுக்கு இருபது வயதாகியது. தாயார் உழைத்துச் சம்பாதித்து இந்த அழகான பிள்ளையை வளர்த்து வந்தாள். சோம்பேறியும், முட்டாளுமான அவன் தலையில் ஒரு முடி கூட முளைக்க வில்லை. பளபளவென்று வழுக்கை!ஒருசமயம் - அவன் மரத்தடியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, சுல்தானின் மகள் தோழிகளுடன் பவனி வருவதை பார்த்தான். அவள் அழகு அவன் மனக் கண்ணில் வந்து ஆடியது.உடனே தன் தயாரிடம் சென்று, ''அம்மா! நீ இப்போதே சுல்தானிடம் போய் அவருடைய மகளை நான் மணக்க விரும்புவதாக கூறு,'' என்றான் வழுக்கைத் தலையன்.''என்ன?'' என்று கீறிச்சிட்டாள் அவன் தயார். ''உனக்கென்ன பைத்தியமா? உன் தலை முழுவதும் சுருள் சுருளாக முடியிருந்தாலும் கூட இந்த எண்ணம் உனக்கு ஏற்பட்டதற்காக உன் தலையைச் சீவித் தள்ளிவிடுவாரே,'' என்றாள்.''சுல்தான் தயாள குணமுள்ளவர் அம்மா. நீ அவரிடம் நான் சொன்னபடி கேளு,'' என்றான் வழுக்கைத் தலையன்.''வழுக்கைத் தலையனுமான உனக்கு அவர் தம் அருமை, அழகு மகளை மனைவியாக்கித் தரவே மாட்டார்,'' என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள் தாயார்.ஆனால், வழுக்கைத் தலையனும் விடுவதாக இல்லை. தினமும் தாயாரிடம் நச்சரித்துக் கொண்டேயிருந்தான். அவன் தொல்லை தாங்காத அவளும், ஒருநாள் தன்னிடமிருந்த நல்ல ஆடையை அணிந்து சுல்தானைச் சந்திக்க, தர்பாருக்கு கிளம்பினாள்.அவள் அதிர்ஷ்டம், அன்று மன்னர் மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து பரிகாரம் நல்கும் நாள். சுல்தானை யார் வேண்டுமானாலும் காணலாம்; தங்கள் விருப்பத்தைக் கூறலாம். ஏழைத் தாயாருக்கு சுல்தானைச் சந்திப்பதில் சிரமம் ஏற்படவில்லை. சுல்தான் நல்லவர். ஆகவே, அவளுடைய விநோதமான விருப்பத்தைக் கேட்டுக் கோபப்படவில்லை.''உன்னுடைய மகனை நேரில் வரச் சொல். அவன் தன் ஆசையை என்னிடம் நேரிலேயே கேட்கலாம். அதனால் ஆபத்து ஏதும் ஏற்படாது,'' என்றார்.அதன்படியே வழுக்கைத் தலையன், சுல்தான் முன் வந்து மண்டியிட்டு நின்றான். அவனது பளபளக்கும் தலையைக் கண்டதுமே மன்னர், அந்த அவலட்சண முட்டாளை எப்படியாவது தட்டிக் கழிக்க எண்ணம் கொண்டார்.''வாலிபனே! நீ என் ஒரே மகளை மணக்க விரும்புவதாக அறிந்தேன். ரொம்ப சந்தோஷம். ஆசைப்பட யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதை அடையும் தகுதியுடையவனாக ஆக வேண்டாமா? ''என் மகளை மணக்க கூடியவன் இந்நாட்டிலுள்ள அழகிய பாடும், பேசும் பறவைகளையெல்லாம் என் அரண்மனைத் தோட்டத்திலுள்ள மரங்களில் வந்து கூடு கட்டி வசிக்கும்படி செய்ய வேண்டும். உன்னால் அது முடியுமானால் நான் என் மகளை உனக்கு மனைவியாக்கத் தயங்க மாட்டேன்,'' என்றார்.வழுக்கைத் தலையனுக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. இருந்தாலும் முழந்தாளிட்டு வணங்கிவிட்டு, விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தான். சுல்தானின் விருப்பத்தை நிறைவேற்ற, தனக்கு உதவக் கூடியவர்களைத் தேடிக் கிளம்பினான். மந்திர சக்தி இல்லாமல் உலகில் உள்ள அழகிய பாடும், பேசும் பறவைகளையெல்லாம் சுல்தானின் அரண்மனைத் தோட்டத்துக்கு வரவழைக்க முடியாதென்பதை அவன் அறிவான். பல நாட்கள் பாலைவனத்தில் சுற்றியலைந்த பிறகு, அவனுடைய அதிர்ஷ்டம் ஒரு மந்திரவாதியை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.''மகனே! உன் கவலைக்கு என்ன காரணம்?'' என்று கேட்டார் மந்திரவாதி.வழுக்கைத் தலையன் எல்லாவற்றையும் கூறினான்.''இளவரசியை மணப்பதற்காக, நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், என்ன செய்தால் பறவைகளை வரவழைக்கலாம் என்று தெரியவில்லையே!'' என்றான்.''நம்பிக்கையை இழக்காதே! இத்தகைய உறுதி உள்ள உனக்குத் தோல்வி ஏற்படாது. நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன். அதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்பதையும் கூறுகிறேன். ''இந்தப் பாலைவனத்தின் கோடியில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. உலகிலுள்ள அத்தனை பறவைகளும் ஒவ்வொரு நாள் இரவும் அந்த மரத்தில் வந்து தங்கும். அந்த மரத்தினடியில் போய் ஒளிந்துகொள். எல்லாப் பறவைகளும் வந்து அடையும் வரையில் பொறுமையாகக் காத்திரு.''பிறகு நான் சொல்லித் தரும் மந்திரத்தைக் கூறு. எல்லாப் பறவைகளும் அப்படியே மயங்கிப் போகும். நீ சொன்னபடியெல்லாம் கேட்கும். நீ ஏதும் சொல்லாவிட்டால் அப்படியே சிலைகளைப் போல் அசைவற்றுக் கிடக்கும். ''மயங்கிய நிலையிலுள்ள பறவைகளை நீ மரத்தின் மீது ஏறி உன்னால் முடிந்த அளவுக்கு அவற்றை எடுத்து உன் தலை, கை, தோள் எல்லாவற்றிலும் அமர்த்திக் கொள். மற்றவற்றைப் பார்த்து, அந்த மந்திரத்தைச் சொல்லி 'என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்' என்று கட்டளையிட்டு விட்டு நட. ''எல்லாப் பறவைகளும் உன் பின்னாலேயே வரும். அவற்றிடமுள்ள மந்திர சக்தியை விடுவிக்க அந்த மந்திரத்தைக் கூறி, இதனால் கட்டுண்ட இவை விடுதலை பெறட்டும் என்று கூறு. அவையும் மந்திர சக்தியிலிருந்து விடுபட்டுச் சுய உணர்வடையும்,'' என்று கூறி அவன் காதோடு அந்த மந்திரத்தைக் கூறினார் மந்திரவாதி.வழுக்கைத் தலையன் மந்திரவாதிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, ஆலமரத்தைத் தேடி ஓடினான். மந்திரவாதி விவரித்தபடியே பறவைகள் எல்லாம் நள்ளிரவில் மரத்தை வந்து அடைந்தன. மந்திரமும் பலித்தது. வழுக்கைத் தலையன் முடிந்த அளவு பறவைகளைத் தன் உடலில் ஏற்றிக் கொண்டு, மற்றவற்றைப் பின்தொடரச் செய்து அரண்மனைக்கு புறப்பட்டான்.- தொடரும்...