உள்ளூர் செய்திகள்

நான்கு வேளை உண்பவன்...

நான், 8ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! எங்கள் தமிழ் ஆசிரியர், புலவர் ம.மணி, தமிழ்ப் பற்று உள்ளவர். அவர் பாடம் நடத்தும் விதமும் அற்புதமாக இருக்கும்.அன்று, திரு.வி.க.,வின், 'உடல் ஓம்பல்' என்ற பாடம் நடத்தும் போது, நாம் எவ்வாறு உண்ண வேண்டும் என்று விளக்கியபடியே வந்தவர், 'சாப்பிடுவதை வைத்து, மனிதர்களை, மூன்றாக பிரிக்கலாம், அவை, யோகி, போகி, ரோகி. அதாவது, ஒருவேளை மட்டும் உண்பவன் யோகி; இரண்டு வேளை உண்பவன் போகி; மூன்று வேளை உண்பவன் ரோகி...' என்று சொன்னார்.குறும்புக்கார மாணவன் ஒருவன், 'ஐயா... நான்கு வேளை உண்பவன்...' என்று கேட்க, கடுப்பாகிய ஆசிரியர், 'அவன் துரோகி...' என்றார். வகுப்பே அதிர்ச்சியில் அமைதியானது.'ஏனென்றால், முன்பு உண்ட உணவு செறிக்கும் முன், மீண்டும் உண்பதால், இந்த உணவு, செரிமான கோளாறாகி, உடல் உபாதைக்கு வழி வகுத்து விஷமாகிறது...'இதனால், தன் உடம்புக்கு, அவனே துரோகியாகிறான்; இப்படிப்பட்டவன் வீட்டிற்கும், ஏன் இந்த நாட்டுக்கே துரோகியாகிறான்...' என்று, ஆசிரியர், தொடர்ந்து சொல்ல, கேள்வி கேட்ட மாணவன், அழுதே விட்டான்.ஏனெனில், அவன் எப்போதும், ஏதேனும் தின்பண்டத்தை தின்றபடியே இருப்பான்; இதை உணர்ந்த ஆசிரியர் அவனுக்கும் உரைக்கும்படி சுட்டி காட்டினார்.இன்றும், உணவு உண்ண உட்கார்ந்தால், 'உடல் ஓம்பல்' என்ற பாடம், என் மனக்கண் முன் வந்து போகிறது; மறக்க முடியாத அனுபவம் அது!- தி.மகாராசன், தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !