இதயக்கோவில்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி, நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1956ல், 6ம் வகுப்பு சேர்ந்தேன். வகுப்பாசிரியர் அப்துல் ரகுமான் வித்தியாசமானவர். கடைநிலையில் இருப்பவரையும், முதல் நிலைக்கு கொண்டு வர முயன்று கற்பிப்பார்.மாத இறுதியில், தேர்வு நடத்தி, மதிப்பெண் அடிப்படையில், 30 மாணவர்களையும், மூன்று குழுக்களாக பிரித்தார். அவற்றுக்கு கம்பர், வள்ளூவர் மற்றும் பாரதியார் என பெயரிட்டார். அவற்றுக்கு மாணவ தலைவர்களை நியமித்து, 'காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் குழுவுக்கு, 300 ரூபாய் பரிசு' என அறிவித்தார்.உற்சாகமுடன் மூன்று குழுவினரும், கற்பதில் தீவிரம் காட்டினர். அன்றன்று நடத்திய பாடங்களை, மதிய உணவு இடைவேளையில், குழுவாக அமர்ந்து, திரும்ப கற்றோம். படிப்பில் முதல் நிலை வகித்தவர்கள், கடைநிலையில் இருந்தவர்களுக்கு விளக்கிப் புரிய வைத்தனர்.இம்முயற்சியால், கடைநிலையில் இருந்த மாணவரும் முன்னேறினர். படிக்கும் ஆர்வம் வளர்ந்தது. அனைத்து பாடங்களிலும், 80 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பெற்றோம். என் வயது, 78; குழுக்கல்வி மூலம் முழுக்கல்வி பெற அடித்தளம் அமைத்த அந்த ஆசான், இறைவனடி சேர்ந்து விட்டாலும், என் இதயக் கோவிலில் தெய்வமாக வீற்றிருக்கிறார்.- எம்.வரதராஜன், பழனி.தொடர்புக்கு: 91505 31415