உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை!

வினு தன் ஊரில் ஒரு சிறு கடை வைத்து நடத்தி வந்தான். அதற்கான சாமான்களை வாரா வாரம் அடுத்த ஊரில் கூடும் சந்தைக்குப் போய் வாங்கி வருவான். அவனிடம் அதிகப்பணம் இல்லாததால் இப்படிச் சிறு முதல் போட்டு வியாபாரம் செய்து கிடைத்த லாபத்தில் பிழைத்து வந்தார். ஒருவாரம் சந்தைக்குப் போகா விட்டால், அவர் சிரமப்பட வேண்டி வரும்.ஒரு வாரத்தில் சந்தைக்குக் கிளம்ப சற்றுத் தாமதமாகி விட்டது. அதனால் சந்தைக்குப் போகும் வண்டிகள் எல்லாம் போய் விட்டன. பணத்தை மடியில் கட்டிக் கொண்டு, அடுத்த ஊரை நோக்கி நடந்தார்.கொஞ்ச தூரம் நடந்ததும், அவர் களைத்துப் போனார். பாவம்! வயதும் அவருக்கு ஐம்பதாகி விட்டது. அதனால் ஒரு மரத்தடியில் போய்க் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்தார்.சற்று நேரத்திற்குப் பின், தலையில் மூட்டையை சுமந்து வந்த முப்பது வயதான ஒருவன் வந்து அதே மரத்தடியில் மூட்டையை இறக்கி வைத்து விட்டு உட்கார்ந்தான்.வினு அவனை முன்பின், பார்த்தது இல்லை. அவனோடு பேசி அவன் பெயர் சந்திரன் என்றும், அவனும் சந்தைக்கு தன் சரக்குகளை விற்கப் போகிறான் என்றும் தெரிந்துக்கொண்டான்.''நான் சரக்கு வாங்கப் போகிறேன். நீ விற்கப் போகிறாயா?'' என்றார் வினு.அதற்கு, சந்திரன், ''நீங்கள் வயதானவர்; நான் இளைஞன். மேலும், நீங்கள் நடக்கும் போதே களைத்து விட்டீர்கள். நானோ மூட்டையைத் தூக்கி வந்தும் களைத்து விடவில்லை. ஆமாம். இந்த வயதான காலத்தில் கணக்குப் பிள்ளையோ, எடுபிடி ஆளையோ ஏன் நீங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது? அப்படி வைத்து இருந்தால், இந்த வயதான காலத்தில், இப்படிச் சிரமப்பட வேண்டாமே?'' என்றான்.''நான் யாரையும் நம்புவது இல்லை. நம்பிக் கெடுவதை விட நம்பாமல் இருப்பதே மேல். இந்தக் காலத்தில் யாரை நம்ப முடியும்? பெற்ற பிள்ளையைக் கூட நம்ப முடியவதில்லையே?'' என்றார் வினு.''ஐயோ பாவம். களைத்துப் போய் மனம் நொந்து பேசுகிறீர்கள். பெரியவரான உங்கள் காலைப் பிடித்து விடுகிறேன். எனக்குப் புண்ணியமாவது கிடைக்கும்,'' என்று கூறி வினுவின் கால்களைப் பிடித்து விடலானான் சந்திரன்.வினுக்கு அது இதமாக இருந்தது.அவனும், ''நீதான் எவ்வளவு நல்லவன்,'' என்றான்.முதலில் வினுவின் கால்களைப் பிடித்த பிறகு கைகளைப் பிடித்து சட்டென அவன் கழுத்தைப் பிடித்து அமுக்கினான். மறுநிமிடம் நினைவு இழந்து விழுந்து விட்டார் வினு.வினு இடுப்பில் கட்டி இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டான். பிறகு, தன் மூட்டையை எடுத்துக் தன் தலையில் வைத்து கொண்டு கிளம்பி விட்டான் சந்திரன்.சற்று நேரத்திற்குப் பின் வினு தன் நினைவு பெற்றார். தன் இடுப்பைத் தடவிப் பார்த்த போது பணப்பை இல்லாதாது கண்டு எழுந்து வேகமாக ஓடினார்.கொஞ்ச தூரத்தில் சந்திரன் உட்கார்ந்திருப்பது கண்டு, வினு ஓடி அவனைப் பிடித்துக் கொண்டு, ''திருட்டுப் பயலே! எடுடா என் பணப் பையை,'' என்று கத்தினார்.சந்துருவும், பணப்பையை எடுத்துக் கொடுத்து, ''பணம் சரியாக இருக்கிறதா? எண்ணிப் பாருங்கள்,'' என்றான்.வினுவும் பையை அவிழ்த்து அதிலிருந்து பணத்தை எண்ணிப் பார்த்தான். அவன் வைத்த பணம் அப்படியே இருந்தது. ஒரு பைசாக் கூடக் குறையவில்லை.திகைத்துப் போனார் வினு.''நீ என்னிடமிருந்து பணப்பையை ஏன் எடுத்து வந்தாய்? இப்போது ஏன் திருப்பிக் கொடுத்தாய்? ஒன்றுமே புரியவில்லையே?'' என்றான்.''யாரையும் நம்பாத நீங்கள் என்னை நம்பினீர்கள். நீங்கள் பிறரைத் திருடன் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு எல்லாரும் திருடன் இல்லை என்று நிரூபிக்க இவ்வாறு செய்தேன். நீங்கள் பிறரை நம்புங்கள். அப்போதுதான் உங்களை மற்றவர்களும் நம்புவார்கள்,'' என்றான்.''எனக்குச் சரியான பாடம் கற்பித்தாய். இனிமேல் யாரையும் அநாவசியமாகச் சந்தேகிக்க மாட்டேன்,'' எனக் கூறி மகிழ்ந்தார் வினு.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !