நம்பிக்கை மலர்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி, சி.எஸ்.ஐ. வேக்கமன் பள்ளியில், 1992ல், 6ம் வகுப்பு படித்த போது, மந்தமாக இருப்பேன். பின்தங்கிய மாணவர்களில் நானும் ஒருவன். ஆங்கில பாட ஆசிரியர் ஆல்பர்ட், ஒரு நாள் பாடக்குறிப்பு தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு பூவின் படம் வரைந்து, வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தேன். பக்கத்திலிருந்தவன், அதை எடுத்து ஆசிரியரிடம் கொடுத்து விட்டான். பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தேன். என்னை அழைத்த ஆசிரியர், அந்த படத்தை அனைவரிடமும் காட்டி பாராட்டினார். புகழ்ந்து பேசினார். எதிர்பாராத பாராட்டால் மகிழ்ந்தேன். வாழ்வில், ஓவியத்துக்கு போட்ட முதல் பிள்ளையார் சுழி அது.பின், என்னை அடிக்கடி அழைத்து, கரும்பலகையில் வரையச் சொல்வார். பள்ளி விழா, அதிகாரிகள் வருகை என, நிகழ்வுகளுக்கு பொருத்தமாக படங்கள் வரைந்து வந்தேன். ஆசிரியர்கள் ராஜா, செல்வராஜ் ஆகியோரும் என்னை தட்டிக்கொடுத்து ஊக்குவித்தனர்.சிறுவர்மலர் இதழில், 'உங்கள் பக்கம்' பகுதிக்கு ஓவியம் அனுப்பச் சொல்லி உற்சாகப்படுத்தினர். அதன்படி, வரைந்து அனுப்பினேன். அது பிரசுரம் ஆனதும், பள்ளி வழிபாட்டுக் கூட்ட அரங்கில் காட்சிப்படுத்தி பெருமைப்படுத்தினர். வரைவதற்கு கருவிகள் வாங்கி கொடுத்ததுடன், போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தினர். பின்னாளில், ஓவியம் கற்று, ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.உலக சாதனைகளுக்காக, பல ஓவியங்களை வரைந்துள்ளேன். இவற்றுக்கு உந்துதலாக அமைந்தது என் ஓவியம். அதை வெளியிட்டு, எனக்கு நம்பிக்கை ஊட்டிய, சிறுவர்மலர் இதழுக்கு மனம் நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.- ப.அன்பு செல்வன், பழனி.