உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (116)

அன்புமிக்க பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 15; 10ம் வகுப்பு படிக்கிறேன். வீட்டிற்கு மூத்த மகள்; இரு தங்கைகள். அம்மா, நீதி மன்றத்தில் தட்டச்சராக பணிபுரிகிறார். அப்பா, போலீஸ் கான்ஸ்டபிள். அப்பா வழி பாட்டி வீட்டோடு இருக்கிறார்; அவர் எனக்கு ஏதாவது அறிவுரை கூறியபடியே இருப்பார்.ஒரு நாள், 'உனக்கு கோலம் போட தெரியுமா...' என கேட்டார்.'தெரியாது...' என கூறினேன். அவ்வளவு தான்... போட்டு தாளித்து விட்டார்.கோலம் போட தெரிவது அவ்வளவு முக்கியமா... கோலம் போடுவதின் முக்கியத்துவத்தை விளக்கி சொல்லுங்களேன் ஆன்டி.அன்பு மகளுக்கு...இந்திய கலாசாரத்தில், முக்கியமான விஷயம் கோலம் போடுதல்; அது ஒரு வகை தியான பயிற்சி! கோலம் போடுபவர்கள் அனைவரும் ஒருவகையில் தரை ஓவியர்கள் தான்.கோலத்தை குனிந்து நிமிர்ந்து போடுவதும், நல்ல உடற்பயிற்சியே.கோலம் போடுவதால், கண் பார்வை சீராகிறது. சிந்தனை ஒரு நிலைப்படுகிறது.ஆண்டில் எல்லா நாளும் கோலம் போட்டாலும், மார்கழி மாதத்தில் போடுவது மகா சிறப்பு!வீட்டு வாசல்படியில், மகாலட்சுமி வாசம் செய்கிறாள்; அதனால், வீடு வாசல் பெருக்கி, பசும் சாணம், மஞ்சள் துாள் கலந்த நீர் தெளித்து கோலம் போட வேண்டும் என்பது நம்பிக்கை. கோலம் போட்ட வீட்டிற்குள், கெட்ட ஆவிகள் நுழையாது; ஆள்காட்டி விரலை நீக்கி, மற்ற விரல்களால் கோலம் போட வேண்டும்.ஒரு கோடோ, மூன்று கோடுகளோ வருமாறு கோலம் போடக் கூடாது; இரட்டை இழைகள் அல்லது நான்கு இழைகளோ கொண்ட கோலம் போட வேண்டும்.அசுப காரியங்கள் நடந்தால் மட்டுமே மூன்று இழை கோலம் போட வேண்டும்.வடக்கில், குபேரனும், கிழக்கில் இந்திரனும், மேற்கில் வருணனும், தெற்கில் யமனும் வாசம் செய்வதால், தெற்கு பார்த்தோ அல்லது தெற்கிலோ கோலம் முடிவுறும்படி போடக் கூடாது.கோலத்தில், பலவகை உண்டு.புள்ளிக் கோலம், கம்பிக் கோலம், ரங்கோலி, பார்டர் கோலம், தொட்டில் கோலம், ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனைக் கோலம், தந்திரிக் கோலம் ஆகியன.அரிசி கோலம் போடுவது, ஒரு வகை தானம்; எறும்புகள், சிறு பூச்சிகள், குருவிகள், அரிசி கோலத்தை, உணவாய் உட்கொள்ளும். ஸ்டிக்கர் கோலம் போடக் கூடாது.அடுக்குமாடி குடியிருப்பில் இருப்போரும் கோலம் போடலாம்.பச்சரிசியை, ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து, காட்டன் துணியால் நனைத்து, பொங்கல் மற்றும் முக்கிய சுப நிகழ்ச்சிகளில் கோலம் போடலாம். 'டைல்' தரையில் கோலம் சீக்கிரம் அழிந்து விடும்; சிமென்ட் தரையில் நீடித்திருக்கும்; மாவு வழிந்தால், ஈர துணியால் துடைக்க வேண்டும்.ஊடுபுள்ளியாகவும் கோலம் போடலாம்.கோலம் போட பாட்டியிடம் கற்றுக்கொள்; கோலம் போடுவதை பற்றி தெரிந்து கொள்ள, ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. யு டியூப்பில் கோலம் பற்றி நுாற்றுக்கணக்கான காணொளிகள் உள்ளன!அடுத்தமுறை உன் வீட்டிற்கு வரும் போது, மீன் கோலம் போட்டு என்னை வரவேற்பாய் என எதிர்பார்க்கிறேன் மகளே!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !