அழியாத கோலம்!
இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது, 1941ல் திருச்சி, வரகனேரி தெற்கு முனிசிபல் ஆரம்ப பள்ளிக்கு அழைத்துச் சென்றார், என் அம்மா. வலது கையை தலைக்கு மேல் துாக்கி, இடது காதை தொட சொன்னார் தலைமையாசிரியர்.அந்த சோதனை முடிந்ததும், 'எட்டு அணா' கட்டணம் பெற்று, பதிவேட்டில், என் பெயரையும், அப்பா பெயரையும் எழுதினார். ஒன்றாம் வகுப்பில் காலடி வைத்தேன். உலகப்போரில் பங்கேற்க சென்ற என் தந்தை, பாகிஸ்தான், லாகூரில், 1943ல் மரணமடைந்தார். பெரும் துயரத்துடன், 4ம் வகுப்புக்கு போனேன். வகுப்பாசிரியராக இருந்த சூசை மாணிக்கம், என் தந்தையின் நண்பர். குடும்ப சூழல் அறிந்து, 'நன்றாகப் படித்து, பெரிய வேலையில் சேர வேண்டும்...' என உற்சாகமூட்டினார்; கவனமுடன் கற்றேன். பள்ளிப்படிப்பை முடித்து, கல்லுாரியில் பொறியியல் பட்டம் பெற்று சென்னையில் பணியில் சேர்ந்தேன். திருமண ஏற்பாடு, 1962ல் நடந்தது. உறவினர், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார் அம்மா. திருமண நாளன்று வரவேற்பு பந்தலில் மனைவியுடன் அமர்ந்தபடி முன் வரிசையை நோட்டம் விட்டேன். வியப்பால் விழிகள் விரிய, அந்த ஆசிரியரைக் கண்டேன். அருகே சென்று மரியாதையுடன் வரவேற்றேன். மிகவும் நெகிழ்ந்து, 'என்னிடம் படித்த நீ ஒருவன் தான் பொறியாளர் ஆகியுள்ளாய்; உன் வாழ்க்கை மேன்மேலும் வளர்க...' என வாழ்த்தினார்.எனக்கு, 87 வயதாகிறது. பள்ளியில் படித்த நாட்களை அசைபோட்டபடி, வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.- மா.ஜெயராமன், சென்னை.தொடர்புக்கு: 90806 88320