புலவரின் ஏழ்மை!
ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்தார் மன்னர் ராஜவர்மன்; சிறந்த அறிவாளி. யுக்திகள் வகுப்பதில் வல்லவர். எந்த செயலுக்கும், 'ஏன்' என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொள்வார். அதற்கான விடையை தேடி கண்டுபிடிப்பதில் முயற்சி எடுப்பார்; எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார். ஒரு நாள் - சபையில் எதையோ யோசித்தவாறு மவுனமாக அமர்ந்திருந்தார் மன்னர். புலவர்களுக்கு ஒரே குழப்பம். தயக்கத்துடன், 'என்ன மன்னா... ஏன் கவலை...' என்றனர். 'ஒன்றுமில்லை... சாதாரணமாக, தானமோ, கொடையோ வழங்கும்போது, கொடுப்பவர் கை மேலேயும், வாங்குபவர் கை கீழேயும் இருக்கும். ஆனால், எப்போதாவது... எங்கேயாவது... வாங்குபவர் கை மேலேயும், கொடுப்பவர் கை கீழேயும் இருக்குமா...' என்றார். விடை தெரியாமல் திகைத்தனர் புலவர்கள்.சபை கலைந்தது. மறுநாள் வயதான புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். ஏழ்மை கோலத்தில், பரிதாபமாக காணப்பட்டார். மன்னரிடம் அழைத்து சென்றான் வாயிற்காவலன். அவையில் அனைவரும் ஏளனமாக பார்த்தனர். மிகுந்த தன்னம்பிக்கையுடன், 'உங்கள் சந்தேகத்துக்கு முறையாக பதில் அளிக்க வந்துள்ளேன் மன்னா...' என்றார் ஏழை புலவர். 'பதிலை சொல்லுங்கள்...''உங்களுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் உண்டா...' 'உண்டு...' என்றார் மன்னர்.'இதோ... சிறிது எடுத்து கொள்ளுங்கள்...'மூக்குப்பொடி டப்பாவை மன்னர் முன் நீட்டினார் புலவர். அப்போது வாங்கிய மன்னரின் கை மேலேயும், கொடுத்த புலவரின் கை, கீழேயும் இருந்தது. மவுனமாக சிரித்தார் ஏழைப்புலவர். சரியான விடை கிடைத்தது. நிறைய பரிசுகள் வழங்கி பாராட்டினார் மன்னர்.குழந்தைகளே... எதைப் பற்றியும் தெளிவாக சிந்தித்தால் தக்க பதில் கிடைக்கும். சிந்தித்து செயல்பட பழகுங்கள்.ஆர்.சேஷாத்திரி