மலை இருவாட்சி!
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம், 1987ல் உருவாக்கப்பட்டது. இதன் மாநிலப் பறவையாக, 'கிரேட் ஹார்ன்பில்' எனப்படும், மலை இருவாட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இமயமலை ஒட்டிய காடுகளில் இப்பறவைகள் அதிகளவில் உள்ளன. மழைக்காடுகள், ஈரமான பசுமைக் காடுகளில் இவை வசிக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகம், மலை இருவாட்சி பறவைகளை பார்க்க சிறந்த இடமாக அமைந்துள்ளது. இந்த பறவை, 90 - 130 செ.மீ., நீளம் வளரும். இறக்கை விரிந்த நிலையில், 152 செ.மீ., அகலம் உடையது. வால் மட்டுமே, 3 அடி நீளம் வளரும். இது, 2.5 - 4 கிலோ எடை கொண்டிருக்கும். இதன் உடல் கருப்பு இறகுகளால் மூடப்பட்டிருக்கும். இறகின் நுனிப்பகுதி, வெள்ளையாக காணப்படும். பெண் பறவைகள், ஆண் பறவைகளை விட சிறியவை. ஆண் இருவாட்சியின் கண்கள் சிவப்பாகவும், பெண் பறவையின் கண்கள் நீலம், மஞ்சள் நிறமாகவும் காணப்படும். இருவாட்சி பறவைகளுக்கான தனித்துவமான அடையாளமாக, அவற்றின் மிகப்பெரிய அலகு உள்ளது. இது மிகவும் திடமானது என்பதால், இருவாட்சி தந்தம் என, அழைக்கப்படுகிறது. சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில், மலை இருவாட்சி பறவையின் அலகுகளை பயன்படுத்தி, சிறிய சிற்பங்களை செய்தனர். இவை மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டன. அருணாச்சலப் பிரதேசத்தின் நைஷி பழங்குடியினர், இருவாட்சியின் இறகுகளை தங்கள் தலைக்கவசத்தில் அணிந்தனர்; அதில், மலை இருவாட்சியின் அலகையும் பொருத்திக் கொள்வது, கூடுதல் வலிமையைக் கொடுக்கும் என நம்பினர். இருவாட்சியின் இறைச்சியை உண்பது, கொடிய நோய்க்கு மருந்தாகக் கருதினர். இறைச்சிக்காகவும், அலகுகளுக்காகவும் இவை வேட்டையாடப்பட்டன. தற்போது, இருவாட்சிகளை பாதுகாப்பதில், பழங்குடியின மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.