பயிற்சி செய்!
கோவை, பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 1987ல், 5ம் வகுப்பு படித்த போது, இசைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்குவேன். அது என் அம்மாவின் துாண்டுதலால் நடந்தது. அறிவியல் ஆசிரியையாக இருந்த ஹேமா, பாடங்களை விளக்கும் முன் மாணவியரை வாசிக்க வைப்பார். அன்று வாசித்த போது நான் திக்கித் திணறினேன். உடனே, 'இசைப் போட்டிகளில் தடையில்லாமல் பாடுகிறாயே... வாசிக்கும் போது மட்டும் ஏன் திக்குகிறாய்... உன் மனதில் உள்ள அழுத்தமே இதற்கு காரணம்; நிதானமுடன் நிறுத்தி வாசிக்க பயிற்சி செய்...' என்றார். பின், ஒவ்வொரு வகுப்பிலும் பாடத்தில் ஒரு பத்தியையாவது உரக்கப் படிக்க பயிற்சி தந்தார், அறிவியல் ஆசிரியை. முதலில் அது கடுமையாக தோன்றியது. விடாமுயற்சியால், மேடை அச்சம் மறைந்தது. சொற்றொடர்களை தெளிவாக உச்சரித்து படிக்கும் பழக்கம் கைகூடியது. எனக்கு, 50 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். சமீபத்தில், பொதுமேடையில் ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இன்னொரு நிகழ்வில் முன்பயிற்சி இன்றி, நன்றியுரை வழங்கினேன். இவற்றுக்கு பாராட்டுதல் பெற்றபோது, பள்ளி அறிவியல் ஆசிரியை ஹேமாவை நன்றியோடு நினைவில் கொண்டேன். கடும் பயிற்சிகள் தந்து என் திறனை வளர்த்தவரை வணங்குகிறேன். - சுபா கணேஷ், கோவை. தொடர்புக்கு: 79014 92876