தலைகீழ் நீர்வீழ்ச்சி!
மஹாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் உள்ளது நானேகாட். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம். அப்போது மலை உச்சியில் 150 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் பாய்கிறது. அது, பள்ளத்தாக்கில் இருந்து வீசும் காற்றால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. அப்போது, சூரிய ஒளியில் நீர்த்திவலைகள், வானவில் நிறங்களை உருவாக்கும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை தான் தலைகீழ் நீர்வீழ்ச்சி என்பர். இந்த அரிய காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிவர்.நானேகாட், பழமையான மலைப்பாதையில் உள்ளது. வரலாற்றில் சாதவாகன வம்ச காலத்தில் கொங்கன் கடற்கரையையும், தக்காண பீடபூமியையும் இணைக்கும் வர்த்தக பாதையாக பயன்பட்டது. இங்குள்ள குகைகளில் பிராமி, தேவநாகரி எழுத்துருவில் பழமையான கல்வெட்டுகள் உள்ளன. அவை, சூரியன், இந்திரன், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களின் சிறப்பையும், அந்த பகுதியில் ஆட்சி செய்த அரசர்களின் சாதனைகளையும் பதிவு செய்துள்ளன. நானேகாட் தலைகீழ் நீர்வீழ்ச்சி, இயற்கையையும், வரலாற்றின் எச்சங்களையும் அனுபவிக்க வைக்கும் அற்புதமான பகுதி. - வி.திருமுகில்