உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (253)

அன்புள்ள பிளாரன்ஸ்...என் வயது, 39; இல்லத்தரசியாக இருக்கிறேன். எனக்கு, 15 வயதில் மகள் இருக்கிறாள்; பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறாள். அதிகாலையில் எழுப்பினால், 'பெற்ற மகளை நிம்மதியா கொஞ்ச நேரம் துாங்க விடமாட்டிங்குற... காலையிலே கடுப்பேத்துறே...' என கடுகடுக்கிறாள்.கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து, 'ஏய் குண்டச்சி... இருக்காத செத்து போயிடு...' என, வெறுப்புடன் கிசுகிசுக்கிறாள்.டியூஷன் போக சொன்னால், 'அய்ய... எப்ப பார்த்தாலும், படிப்பு, படிப்பு; இதை துாக்கி போட்டுட்டா தேவல...' என ஆலாபிக்கிறாள். வெறுப்பு ஏற்படுவதால், 'கண்டபடி உளறாதே...' என அடக்கி வருகிறேன்.என் கணவரோ, 'இது கவனம் செலுத்த வேண்டிய விஷயம்; உடனே, நடவடிக்கை தேவை...' என்கிறார். என்ன செய்யலாம்... நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா.இப்படிக்கு,ராஜி ராமநாதன்.அன்புள்ள அம்மா... உன் மகளின் சிறு, சிறு டயலாக்குகள் எல்லாம், அபாய எச்சரிக்கைகள். அதை அலட்சியப்படுத்தாதே... தற்கொலை எண்ணம் உடைய பதின்ம வயதினருக்கு ஏற்படும் அறிகுறிகள் என்பதை புரிந்து கொள்ளவும். கீழ்கண்ட செயல்கள் குழந்தைகளிடம் இருந்தால் கவனம் தேவை...* உணவு உண்பதிலும், துாங்குவதிலும் மாறுபாடுகள்* தொடர்ச்சியான துக்க முகம்; வயிற்று வலி, தலைவலி, மயக்க புகார்* குடும்பம், பள்ளி, தோழர், தோழியரிடமிருந்து விலகுதல்* உடல் எடை திடீரென கூடுதல் அல்லது குறைதல்* கலக மனோபாவம், எரிச்சல், படபடப்பு* பார்க்காததை பார்த்ததாக, கேட்காதவைகளை கேட்டதாக கூறுதல்* துப்பாக்கி, கத்தி, கயிறு போன்ற பொருட்கள் மீது ஈர்ப்பு* உதவியின்மை, நம்பிக்கையின்மை, குழப்பம், கோபம், சந்தேகம்.இவையிருந்தால் நன்கு கவனிக்கவும்.பருவ வயதில், 15 முதல், 24 வரை நடக்கும் மரணங்களில், தற்கொலை இரண்டாமிடம் வகிக்கிறது. பெண்களை விட, ஆண்கள், நான்கு மடங்கு தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் கூறுகிறது.உன் மகள் விஷயத்தில் செய்ய வேண்டியது...* வீட்டிற்குள் தந்தை ஒரு தீவாக, தாய் ஒரு தீவாக, குழந்தைகள் தனித்தனி தீவுகளாக செயல்பட வேண்டாம் * மகளிடம் மனம் விட்டு பேசு; குற்றம் சாட்டாதே... அவளை தனியே விடாதே...* தற்கொலைக்கு எதிரான நம்பிக்கை வாக்கியங்களை ஊட்டு* எலி கேக், மூட்டை பூச்சி விஷம் மற்றும் மாத்திரைகளை அகற்று* மகளின் நெருங்கிய தோழியர், பள்ளி ஆசிரியைகளை அணுகி, பிரச்னையை முழுமையாக அறிந்து கொள்* மகள் முன், கணவன், மனைவி சண்டை போட்டு கொள்ளாதீர்* தற்கொலை தொடர்பான ஆலோசனைக்கு, இலவச தொலைபேசி எண், 112. அதில் பிரச்னைகளை கூறி ஆலோசனை பெறலாம். உதவும் அலைபேசி எண், 741- இதற்கு, 'ஸ்டார்ட்' என குறுஞ்செய்தி அனுப்பலாம். 988 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம். தற்கொலை நிகழ்வை தடுத்து, நலவாழ்வுக்கு ஆலோசனை தரும் அலைபேசி எண்: 91529 87821 மற்றும் ஆஸ்ரா உதவி நிறுவன எண்: 98204 66726 சினேகா உதவி நிறுவன எண்: 044- - 2464 0050 ஜீவன் ஆலோசனை எண்: 044 - -2656 4444 ஆகிய தொலைபேசிகளில் தக்க ஆலோசனை பெறலாம்.மனநல நிபுணரை சந்தித்து, தனிநபர் தெரபி, குடும்ப அங்கத்தினர் தெரபி பெறலாம். தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !