உள்ளூர் செய்திகள்

பாம்பும் பரம்பும்!

தேனி மாவட்டம், பெரியகுளம், இ.புதுப்பட்டி, அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில், 1960ல், 5ம் வகுப்பு படித்தபோது வகுப்பு ஆசிரியர் தனுஷ்கோடி.தமிழ் பாடம் நடத்தினார். அவரது விவசாய நிலம் வெளியூரில் இருந்தது; அவ்வப்போது, அந்த பணிகள் குறித்து அதன் மேற்பார்வையாளர் கடிதம் எழுதுவார்.அன்றைய கடிதத்தை பிரித்து ஒரு மாணவனிடம் படிக்க சொன்னார். அதை வாங்கியவன், 'தண்ணீர் பாய்ச்ச, ஒன்றே கால் ரூபாய்; உரம் போட ஒன்றரை ரூபாய், நாற்று நட, ஏர் உழ...' என்றவாறு, 'பாம்பு அடிக்க ஒரு ரூபாய்...' என செலவுக் கணக்கை வாசித்து முடித்தான்.தொடர்ந்து, 'அவன் படித்ததில் என்ன தவறு இருக்கு...' என்று கேட்டார் ஆசிரியர். ஒன்றும் புரியாமல் தவித்தபோது, 'கடைசியில் என்ன எழுதியிருக்கு...' என அழுத்தமாக கேட்டார். மீண்டும், அதையே வாசித்தான்.தபாலை வாங்கியபடி, 'கடிதத்தில், 'பரம்பு அடிக்க' என்பதற்கு, 'பாம்பு அடிக்க' என எழுதப்பட்டுள்ளதை கவனியுங்கள். இது சிறு பிழை தான்... ஆனால், பொருளே மாறி விட்டதே... எனவே, எதிலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்...' என அறிவுரைத்தார்.எனக்கு வயது, 72; அந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் சிரித்து விடுகிறேன்.- பி.ஜம்பர் ஜோதி, தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !