உள்ளூர் செய்திகள்

ஆங்கிலம் பேசு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 2015ல், 11ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். ஆங்கில ஆசிரியர் பிரேம், எந்த பாடம் நடத்தினாலும், கதாபாத்திரமாகவே மாறி சொல்லிக் கொடுப்பார். ஆங்கிலத்தில் பேச உற்சாகப்படுத்துவார். எனக்கும் பேச ஆசை. மற்றவர் முன்னிலையில் பயமாக இருந்தது. ஒருநாள் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை கவனித்தவர், 'வகுப்பில் எல்லார் முன்னிலையிலும் ஆங்கிலத்தில் பேசு...' என்றார். பயத்தில் நடுங்கினேன். மிகவும் பரிவுடன், 'உன் முன் உள்ள கனவுகளை மட்டும் பார்... சாதிக்க முடியும். மற்றவர் என்ன நினைப்பர் என்று எண்ணாதே... அவர்கள் உன்னுடன் வரபோவது இல்லை; யாரைக் கண்டும் பயப்படாதே...' என்று அறிவுரை கூறி தெளிய வைத்தார். துணிவும், நம்பிக்கையும் ஏற்பட்டது.தற்போது, என் வயது, 21; கல்லுாரியில் இளங்கலைப் படிப்பை முடிக்க உள்ளேன். சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறேன். இதற்கு தைரியம் தந்தவரை நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.- பா.கோமதி, திண்டுக்கல்.தொடர்புக்கு: 97918 50132


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !