உள்ளூர் செய்திகள்

ஒற்று-உளவு-சதி! - இரண்டாவது உலகப்போர்!

இளவரசி சாலோவுக்கு ஓர் உளவுச் செய்தி வந்தது. தாய்லாந்து என்று அழைக்கப் படும் சயாம் நாட்டு இளவரசி சாலோ. தாய்லாந்தின் தலைநகரமான பாங்காங்கி லிருந்தாள் இளவரசி. ஜப்பானியர்கள் தாய்லாந்து மீது படையெடுத்து சில வாரங்களே ஆகி இருந்தன. தாய்லாந்து நாட்டு யுத்த இலாகாவிலுள்ள மேஜர் தான் செய்தி அனுப்பி இருந்தார். லண்டனுக்குச் சென்று பிரிட்டிஷாரைச் சந்திக்கும்படி கூறியது செய்தி.மேஜர், இளவரசியை நேரில் சந்தித்து, ''பிரிட்டிஷாரிடம் கூறுங்கள், ஜப்பானோடு நாங்கள் செய்து கொண்டுள்ள நட்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டது கட்டாயத்தின் மீதும், வன்முறையினாலும் தான். நாங்கள் விரும்பி அதில் கையொப்ப மிடவில்லை என்று விளக்குங்கள்,'' என்றார்.தாய்லாந்து மீது படையெடுத்து நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட ஜப்பானின் நோக்கம் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றை விழுங்குவதற்காக, தங்கள் போர்ப்படைகள் தாய்லாந்து வழியாகச் செல்ல அனுமதிப் பதற்காக. ஜப்பானியர்களைப் பகைத்துக் கொள்ள இயலாத பலமற்ற தாய்லாந்து, அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டிய தாயிற்று. தங்கள் போர்ப்படை வீரர்களைக் கொண்டு வந்து குவித்த ஜப்பானியர், தாய்லாந்தில் நான்கு டிவிஷன் படைகளை நிறுத்தி, நட்பு உடன்படிக்கையில் தாய்லாந்திடம் கையெழுத்து வாங்கிக் கொண்டது.தாய்லாந்து மக்கள் இந்த உடன்படிக்கை யினால் கொதித்துப் போயினர். ஆனால், ஜப்பானியரை எதிர்த்துப் போரிட அவர்களிடம் படைபலம் இல்லை. ஆகவே, ஜப்பானியர் சொல்கிறபடி கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை. உண்மை நிலையைப் பிரிட்டிஷாரும், அமெரிக்கர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தாய்லாந்து கருதியது. ஆகவே, அவர்களுடைய ஒற்றர்களையும், உளவாளிகளையும் வரவேற்றது தாய்லாந்து.இளவரசர் லாம்புன் மகள் தான் சாலோ, இவளை தாய்லாந்து மக்கள் 'ரோஸ் ஆப் லாம்புன்' என்றழைப்பர். தாய்லாந்தின் மிகச்சிறந்த அழகிகளுள் ஒருவள் சாலோ. ஆங்கிலமும், ஜப்பான் மொழியும் சரளமாகப் பேசக் கூடியவள் சாலோ. தன்முன் உள்ள கடமையை நிறைவேற்ற லண்டனுக்குக் கிளம்பினாள் சாலோ உளவாளியாக.முதல் கட்ட பயணத்தில் ராணுவ விமானத்தில் மேற்கு தாய்லாந்தி லுள்ள சியங்கிராய் போய்ச் சேர்ந்தாள். இளவரசியோடு மேஜர் சூரிட்டும் சென்றார். அதுவரை பிரச்னை ஏதுமில்லை. காரணம், தாய்லாந்தின் அப்பகுதியை ஜப்பானியர் ஆக்கிரமிக்கவில்லை. சியங்கிராய் விமான தளத்தில் விமானம் இறங்கும் வேளையில் விமான தளப் பணியாளர்கள், ரன்வேயில் ஜப்பானிய விமானங்களுக்கு வழிகாட்டி உதவி, உலோகத் தகடுகளைப் பதித்துக் கொண்டிருந்தனர். ஜப்பானிய விமானங்கள் சில நிமிடங்களில் தரை இறங்க இருப் பதையும் அறிந்தார் இளவரசி. எதிரியான ஜப்பானியர்களைப் தோற்கடிக்க அவர்களை முந்திக்கொண்டு செயல்பட சாலோ திட்டமிட்டாள் எப்படி?அடுத்த கட்டப் பயணத்தை யானை மீது மேற்கொள்ள முடிவு செய்தாள் இளவரசி. இரண்டு வழிகாட்டிகளுடன் ஆறு நாள் பயணம். அடர்ந்த கானகங்களினூடே ஆறாம் நாள் பயணம் முடிவில் மாலை நேரத்தில் தாய்லாந்து-பர்மா எல்லை சில மைல் தூரமே இருக்கும்போது, ஜப்பானிய காலாட்படை திடீரென்று கானகத்திலிருந்து வெளிப்பட்டது.யந்திரத் துப்பாக்கிகளைக் குறி வைத்தபடி, ஜப்பானிய காலாட்படை அதிகாரி, இளவரசியை நிற்கும்படி உத்தரவிட்டார்.''யார் நீ எங்கு போகிறாய்?'' என்று அதட்டலாகக் கேட்டார்.தவறான ஒரு சிறு செயலும் அவள் கைதாவதற்கு காரணமாகலாம். சித்ரவதை, மரண தண்டனை தொடரலாம். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள் சாலோ. ''நான் சயாமிய இளவரசி. என் உறவினரைக் காணப் போய்க் கொண்டிருக்கிறேன், கென்டுங்கிலுள்ள சாபாவுக்கு,'' என்றாள் இளவரசி.ஜப்பானிய அதிகாரி சற்றே யோசித்தார். யானை மீது பயணிக்கும் தகுதியுடைய ஒரு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்தால், உள்ளூர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகலாம் என்று கருதி, இளவரசி சாலோவை தொடர்ந்து பயணிக்க அனுமதித்தார்.நிம்மதி பெருமூச்சுடன் இளவரசி யானையை வேகமாகச் செலுத்த முன்னேறினாள். ஜப்பானிய ரோந்துப் படையினர் விரைவிலேயே, வழக்கமாக தங்கள் சரிபார்க்கும் காரியப்படி செயல்பட்டு இளவரசி கூறியது பொய் என்று அறிந்து, தன்னைப் பிடிக்க வருவார்கள் என்பது இளவரசிக்கு தெரியும். நடந்ததும் அதுவே. தாய்லாந்தையும், பர்மாவையும் பிரிக்கும் நதியைக் கடந்து கொண்டிருந்தாள் யானை மீது. ரோந்துப் படையினரின் துப்பாக்கிக் குண்டுகள் இளவரசியை நோக்கி சீழ்க்கை அடித்தபடி பறந்து வந்தன.அபாயத்தை உணர்ந்த யானை, வெகுவேகமாக நதியில் நீச்சலடித்தபடி முன்னேறி, பர்மா எல்லைக்குள் சென்று தோழமையான காட்டினுள் புகுந்து மறைந்தது. இதன் பிறகு பயணத்தில் பிரச்னை ஏதுமில்லை. பிரிட்டிஷார் இளவரசி மூலம் உண்மை நிலையை அறிந்து தாய்லாந்தை நம்புவதாகவும், ஜப்பானுக்கு எதிராக உதவுவதாகவும் வாக்களித்தனர். போர்க்காலத்தில் இளவரசி, இதுபோன்ற ரகசியத் தவகல்களைத் தாய்லாந்துக்கும், அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்குமிடையே பட்டுவாடா செய்யும் உளவாளியாகச் செயல்பட்ட அவரது தீரச் செயலைப் அம்மூன்று நாடுகளும் பாராட்டி விருது வழங்கின.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !