உள்ளூர் செய்திகள்

இனிமை தரும் இலந்தை!

மர வகையை சேர்ந்தது இலந்தை. கிளைகள் முட்கள் நிறைந்தது. வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில், 9 மீட்டர் உயரம் வரை வளரும். பழம், சிவப்பு நிறத்தில் பளபளப்பாக காணப்படும். இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் துளிர் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.இலந்தை பழத்தில் வைட்டமின் - சி சத்து நிறைந்திருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். கால்ஷியம், பாஸ்பரஸ், மக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீனால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படும்.இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதி பெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும். முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இலந்தை பழம் சாப்பிடலாம். உடலில் நீர்சத்து இழப்பை சரி செய்யும். ஞாபக சக்தியை தரும். சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இலந்தை பழத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பழைய தமிழ் சினிமா ஒன்று இந்த பழம் சார்ந்த பாடலால் மிகவும் புகழ் பெற்றது. தமிழகத்தில் இந்த மரப் பெயரால் ஊர்கள் அமைந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இலந்தைவிளை, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே இலந்தோப்பு என ஊர்கள் இந்த மரப்பெயர் அடியொற்றி அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !