குரங்கும் தையல்காரரும்!
முன்னொரு காலத்தில் -தையல் கடைக்காரரிடம் நெருங்கி பழகியது ஒரு குரங்கு. அதற்கு தேவையான உணவுகளை கொடுத்து வந்தார்.தீபாவளி நெருங்கியதால், அன்று மும்முரமாக துணி தைக்கும் பணியில் இருந்தார்.அப்போது, 'எல்லாரும் தீபாவளிக்கு புத்தாடை அணியிறீங்க; எனக்கும் ஆசையாக இருக்கு; ஒரு சட்டை தைத்து தர்றீங்களா...' என்றது குரங்கு.'சட்டை தைத்து தருகிறேன்; ஆனால், இந்த ஆசை உனக்கு தேவையற்றது...' 'ஏன் அப்படி சொல்றீங்க...' 'மனிதருக்கு தான் வெட்கம், மானம் உண்டு; உன் போன்ற விலங்குக்கு அவை தேவையில்லை. நீ, சட்டை போட ஆசைப்பட்டால், அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும்; நாயாய், பேயாய் அலைய வேண்டியிருக்கும். இப்போது போல் சுதந்திரமாக திரிய முடியாது. அடிமையாக இருக்க வேண்டும்; இதற்கு சம்மதித்தால் சட்டை தைத்து தருகிறேன்...' என்றார் தையல்காரர். குரங்குக்கு தலை சுற்றியது; சுதந்திர வாழ்வை இழக்க அது தயாராக இல்லை. எனவே, 'புத்தாடை ஒண்ணும் வேணாம்; நீங்களே கொண்டாடுங்க; பட்டாசு சத்தம் முடிந்தவுடன் வருகிறேன்; இப்போது காட்டுக்கு போறேன்...' என்று கூறியது குரங்கு. வீட்டிலிருந்த பலகாரங்களை, மூட்டைக் கட்டி கொடுத்து, 'நல்ல படியாக சென்று வா...' என வழி அனுப்பினார் தையல்காரர். சகோதரர்களை பார்க்க காட்டுக்கு புறப்பட்டது குரங்கு.செல்லங்களே... கிடைக்கிற வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவித்து வாழுங்கள். ர.கா.செந்தில்