நாவடக்கம்!
வசந்தாவுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம். உலகில் சண்டை சச்சரவுகள் எல்லாம் ஏன் ஏற்படுகின்றது என்பதுதான் அது.அவள் பலரிடம் அது பற்றிக் கேட்டுப் பார்த்தாள். ஆனால், யாருமே அவள் திருப்தி அடையும் விதத்தில் பதில் கூறவில்லை.ஒருநாள் ஒரு சன்னியாசி அவள் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார்.அவரிடம், ''சுவாமி! உலகில் சண்டை சச்சரவுகள் ஏன் ஏற்படுகிறது?'' என்று கேட்டாள்.''பிச்சை கேட்டால் அதைப் போடாமல் இப்படி முட்டாள்தனமான கேள்வி கேட்கிறயே... உனக்கு வேறு வேலையே இல்லையா?'' என்றார்.உடனே வசந்தா, ''ஏய்! ஊர் ஊராகத் திரிந்து பிச்சை எடுக்கும் உனக்கு இவ்வளவு வாய்க் கொழுப்பா?'' என்று அவரோடு பெரிய சண்டை போட ஆரம்பித்தாள்.சன்னியாசி சிரித்தவாறே, ''அம்மணி! நான் ஒரு வார்த்தை சொன்னதற்காக நீ இவ்வளவு கோபப்பட்டு பொரிந்து தள்ளுகிறாயே... மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட எவ்வளவோ காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது வாய்ச்சொல்தான். இதை உனக்கு எடுத்துக்காட்டவே, அவ்வாறு கூறினேன். 'நாவடக்கம்' இருந்தால் பெரும்பாலான சண்டை சச்சரவுகள் இல்லாமல் போய்விடும்,'' என்றார்.அதைக் கேட்ட வசந்தாவுக்கு, உலகில் சண்டை, சச்சரவுகள் ஏற்பட காரணம், 'வாய்ச்சொல்'தான் என்ற அர்த்தம் புரிந்தது.அந்த சாமியாரிடம் மன்னிப்பு கேட்டு, இனி தானும் நாவடக்கத்துடன் செயல்படுவதாகக் கூறினாள்.***