உள்ளூர் செய்திகள்

டுபாக்கூர்!

கோவை, ஆர்.எஸ்.புரம் நகராட்சி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1971ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். வாரத்தில் வெள்ளியன்று கடைசியாக, 'கிராப்ட்' என்ற கைவினை பயிற்சி வகுப்பு நடக்கும். அதை புறக்கணித்து, புத்தக மூட்டையோடு கிளம்பி விடுவர் மாணவர்கள்.ஒருநாள் உடன்படித்த சண்முகசுந்தரத்துடன் அதுபோல் சென்று விட்டேன். எங்கள் போதாத காலம், கண்டிப்பு நிறைந்த தலைமை ஆசிரியர் ராமசாமியிடம் சிக்கிக் கொண்டோம்.வகுப்பை விட்டு வெளியேற்றி, பெற்றோரை அழைத்து வர கட்டளையிட்டார். குடும்பத்தினருக்கு தெரிந்தால், அடி கிடைக்கும் என அஞ்சி நடுங்கினோம். எனவே, ஊரில் தெரிந்தவர்களிடம் நிலைமையை எடுத்து கூறி, பெற்றோராக நடிக்க அழைத்து சென்றோம்.அவர்களிடம், 'பிள்ளைகளை கண்டித்து வளர்க்க வேண்டாமா...' என துவங்கி அறிவுரை சொல்ல துவங்கினார், தலைமை ஆசிரியர். அடுத்த கணம், எங்களை நையப்புடைத்தனர், நாங்கள் அழைத்து சென்றிருந்த டுபாக்கூர்கள். சிரமப்பட்டு அவர்களிடம் இருந்து விடுவித்து காப்பாற்றினார் தலைமை ஆசிரியர்.பஞ்சாயத்து முடிந்து வெளியே வந்ததும், 'தம்பிகளா... இனிமேலும் பிரச்னைன்னா சொல்லுங்க. உடனே வந்துடுறோம்...' என்றனரே பார்க்கலாம். இது போல் போலியாக அழைத்து சென்றது எவ்வளவு பெரிய தவறு என, பின்னர் உணர்ந்து வருந்தினோம்.என் வயது, 72; பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அவ்வப்போது, பேரப்பிள்ளைகளிடம் அந்த சம்பவத்தை சுவாரசியமாக சொல்லி, விலா நோக சிரித்து மகிழ்கிறேன்!- என்.மாசாணதுரை, கோவை.தொடர்புக்கு: 99446 95806


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !