உள்ளூர் செய்திகள்

வயலின் வனிதா! (28)

இதுவரை: ஊனமுற்றோர் மறுவாழ்வுக்காக நிதி திரட்ட தெருவில் பாடி வந்த குட்டிக் குழுவினரைக் கண்ட வனிதா, அவர்களுக்கு முறையாக சேர்ந்து பாடும் பயிற்சி அளித்தாள். இனி -''எங்களுக்கு இப்போது தசரா விடு முறை அக்கா. ஒரு வாரம் முழுக்க, நாம் முழு நேரமும் வசூலில் ஈடுபடலாம்!'' என்றான் ஒரு சிறுவன் உற்சாகமாக.''எனக்கும் விடுமுறை தான். ஆனால், நான் தினமும், நாள் முழுவதும் உங்களோடு வசூலிக்க வர முடியாது. எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது. நாளைக்கு உங்களுக்காக வசூலை ஆரம்பித்து வைக்க காலையில் வருகிறேன். பிறகு, எனக்கு வசதி பட்டால், உங்களோடு கலந்து கொள்ளுவேன்!'' என்றாள் வனிதா.அவர்களின் ஆர்வமும், உற்சாகமும் இந்த ஒரு வாரமாக இதில் அவளை ஈடுபட வைத்திருந்தாலும், அத்தையின் நினைவு அவளை சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. லீலா மற்றும் அவள் தோழிகளின் பார்வையில் படாதிருக்க வேண்டும் என்ற கவலை வேறு அரிக்க ஆரம்பித்தது. ஆகவே, இந்தக் குழந்தைகளுடன் நிதி வசூல் கச்சேரியில் முழு மூச்சாக கலந்து கொள்வதைத் தவிர்க்க விரும்பினாள்.''நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு இங்கே எல்லாரும் வந்து விடுங்கள். திலகர் நகரிலிருந்து நீங்கள், உங்கள் நிதி வசூல் நிகழ்ச்சியை ஆரம்பியுங்கள். நானும் கலந்து கொள்கிறேன். ''சீதா! என்னோட வயலினை உன் வீட்டுக்குக் கொண்டு போ. உன் வீட்டிலேயே வைத்திரு... நாளை வரும் போது கொண்டு வா!'' என்று திட்டமிட்டு அவர்களை அனுப்பி வைத்தாள்.குழந்தைகளுக்கு வனிதா தங்களுக்கு உதவுவதில், அக்கறை காட்டு வதில் ரொம்ப மகிழ்ச்சி. அவள் எது கூறினாலும் அதைக் கேட்க, நிறைவேற்றத் தயாராக இருந்தனர்.மறுநாள் வனிதா தன் அத்தையிடம் சாதுரியமாக ஏதோ காரணம் கூறி வீட்டி லிருந்து கிளம்பினாள். குழந்தைகளின் நிதி வசூல் முயற்சியைத் தொடங்கி வைக்க. அமைதியான காலனியில் அடுக்குமாடி அப்பார்ட்மெண்டுகளில் உள்ளவர்களை வெளியே எட்டிப் பார்க்க வைத்தது வனிதா இசைக் குழுவினரின் இசை. பெண்களும், குழந்தைகளும், வீட்டிலுள்ள பெரியோர் களும் வியப்போடு வந்து கூடினர். குழந்தைக் குரலில் பக்திப் பாடல்கள் வித்தியாச மாகக் களை கட்டியது.''நாங்கள் பிழைப்புக் காக இப்படிப் பாட வில்லை. கவுரவமான குடும்பத்துக் குழந்தைகள் தான் நாங்கள். ஊன முற்றோரின் மறு வாழ்வுக்காக நிதி வசூல் செய்யவே இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கிறோம். நீங்கள் தரும் பணத்தை நாங்கள் எங்களுக்காக செலவு செய்ய மாட்டோம்...'' இவ்வாறு விளக்கம் அளித்தாள் வனிதா.தான் கலந்து கொள்ளாத நாட்களிலும் இதே விளக்கத்தைக் கூறுமாறு, அவர்களிடம் சொல்லி இருந்தாள்.வனிதா குழுவினரின் வித்தியாசமான இசை நிகழ்ச்சி குடியிருப்புப் பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலும் கணிச மாக இருந்தது. ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் பலபேர் மனமுவந்து கொடுத்தனர். ஆரம்ப நாள் வசூலே 2000 ரூபாயை எட்டியதில் குழந்தைகளுக்கு ரொம்ப குஷி. எல்லாரும் வனிதாவை ரொம்பப் புகழ்ந்தனர்.''வசூலான பணத்தை யார் எப்படி பாதுகாக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டாள் வனிதா.''எங்க அப்பாவிடம் கொடுத்து வைக் கிறேன்!'' என்றாள் சீதா என்ற பெண்.''அது நல்லதுதான்... குழந்தை களான நம்மிடம் பணம் இருப்பது பத்திரமல்ல... நீ உன் அப்பாவிடம் கொடுத்து வைப்பதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவசரத் தேவைக்கு அவர் இந்தப் பணத்தை செலவு செய்து விடலாம். பிறகு அதை ஈடுகட்ட அவர் சிரமப்படலாம். ஆகவே, அன்றாடம் வசூலாவதை உங்கள் பள்ளி ஆசிரியரிடம் கொடுத்து விடுங்களேன். அதுதான் பத்திர மானது; முறையானதும் கூட...'' என்றாள் வனிதா.குழந்தைகளும் அவள் யோசனைப் படியே நடப்பதாகக் கூறினர்.''இனி நீங்கள் நான் கூறியபடி குடியிருப்புப் பகுதிகளில் உங்கள் நிதி வசூலைத் தொடருங்கள். தினமும் மாலை ஐந்து மணிக்கு வழக்கமாக நாம் கூடும் பார்க்குக்கு வாருங்கள். நான் உங்களுக்காக அங்கு காத்திருப்பேன். உங்கள் சாதனையைத் தெரிந்து கொள்ள உங்களோடு கலந்து கொள்ள வசதிப்படுமானால், அதையும் மாலை சந்திப்பில் தெரிவிக்கிறேன். சீதா! நீ என் வயலினை உன் வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்!'' இவ்வாறு அவர்களிடம் திட்டமிட்டிருந்தாள் வனிதா.அதன்படியே குழந்தைகளும் செயல்பட்டனர். தினமும் மாலையில் பார்க்கில் அவர்கள் வனிதாவை சந்தித்தனர். நாளுக்கு நாள் வசூலிலும் முன்னேற்றம் ஏற்படலாயிற்று.நவராத்திரியின் ஐந்தாவது நாள். அன்று குழந்தைகளோடு நிதி வசூல் கச்சேரியில் கலந்து கொள்ளுவதாக இருந்தாள் வனிதா. செல்வந்தர்கள் வசிக்கும் பங்களாக்கள் உள்ள பகுதிக்குப் போவதாக ஏற்பாடு. வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி. தனித்தனி பங்களா, காவல்காரரின் அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய முடியும். இரண்டொரு பங்களாக்களில் உள்ளே நுழைய காவலாளி அனுமதிக்கவில்லை. இது குழந்தைகளுக்கு ஏமாற்றமாக இருந்தது. வனிதா சாதுரியமாகப் பேசி சில பங்களாக்களில் புக அனுமதி பெற்று விட்டாள்.அந்த பங்களாவின் அருகே வந்ததும், அதை முன்பே பார்த்திருக்கும் நினைவு பளீரிட்டது வனிதாவின் மனதில். யோசித்தாள்.''ஆமாம்! இது பிரபல இசையமைப்பாளர் கோஸ்வாமியின் பங்களா அல்லவா? அன்று பரசுராம் கொடுத்த சி.டி.,யைக் கொடுக்க இங்குதானே வந்தேன்!'' என்று அவள் உள் மனம் உற்சாகமாகக் குரல் கொடுத்தது. வனிதாவின் இதயம் 'தடக் தடக்' என்று அடித்துக் கொண்டது.அன்று நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் சலனப்படம் போல மனத்திரையில் ஓடின. சங்கர்லால் தன்னை சோலோ வயலின் வாசிக்க அறிவிப்பு செய்ததும், அப்போது பார்வையாளர் வரிசையில் கோஸ்வாமி உட்கார்ந்திருந்ததும், வயலினை மீட்ட முடியாமல் தன் விரல்கள் ரணமாக வலித்ததும், அந்த நிகழ்ச்சி சங்கர்லாலுக்கும், தனக்கும் ஏமாற்றமாக முடிந்ததும் நினைவில் மிதந்து, அவள் கண்களை ஈரமாக்கின. கோஸ்வாமியின் பங்களா காவல்காரன் அவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்த அதே வேளையில் பங்களாவின் போர்டிகோவிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.''அவர்களை உள்ளே அனுப்பு!'' என்றுஅந்தக் கனிவான பெண்ணின் குரல் வனிதாவை கனவுலகிலிருந்து நினைவுக்குக் கொண்டு வந்தது. அவர்களை வரவேற்ற அந்தப் பெண் கோஸ்வாமியின் துணைவியார், பெயர் சரஸ்வதி. குழந்தைகளையும், அவர்களுடைய வாத்தியங்களையும் வியப்போடு சிரிப்போடு பார்த்தாள் சரஸ்வதி.அவர்களுடைய பக்திப் பாடல் களை ரசித்துக் கேட்டாள். குழந்தை கள் தங்கள் குறிக்கோளை கூறியதையும் ஆர்வத்தோடு கேட்டாள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தாள். நிதியாக ஒரு ஆயிரம் ரூபாயையும் கொடுத்தாள். அப்போது-வெளியே போயிருந்த கோஸ்வாமி காரில் வந்து இறங்கினார். குழந்தைகளிடையே தன் மனைவி குதூகலமாக பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார். சரஸ்வதி அவரின் அருகில் போய், இந்தக் குழந்தைகள் இனிமையாகப் பாடுகின்றனர். நீங்கள் கேட்டால் அசந்து போவீர்கள்!'' என்று கூறியவள் அவர்களைப் பாடும்படி கூறினாள்.குழந்தைகளும் உற்சாகமாக தங்கள் வினோதமான வாத்தியங்களில் ஒலி எழுப்பிப் பாடலாயினர். கோஸ்வாமியின் பார்வை வனிதாவின் மீதே பதிந்து நின்றது.வனிதாவும் உள்ளம் குறுகுறுக்க அவரையே பார்த்தபடி வயலினை மீட்டினாள்.'ஆண்டவா! வாசிப்பு நன்றாக இருக்க வேண்டும். குழப்பத்தில் தாறுமாறாக...'' தடதடத்தது அவள் மனம்.''கேட்டீர்களா? இந்த எளிமையான வாத்தியங்களில் எத்தனை இனிமையாகப் பாடுகின்றனர்!'' என்று வியந்தாள் சரஸ்வதி.''வயலின் வாசிக்கும் அந்தப் பெண்ணை நான் இதற்குமுன் எங்கேயோ பார்த்திருக்கிறேன்!'' என்றார் கோஸ்வாமி.''அவள் வாசிப்பு தேர்ச்சி பெற்றதாக இருக்கிறது!'' என்றவர், வனிதாவை அழைத்து விசாரித்தார்.வனிதா, பரசுராமின் சார்பாக அன்று அவர் வீட்டுக்கு வந்ததையும், திருடர்களைப் பிடித்துக் கொடுத்ததையும் கூறினாள்.''ஆமாம்... இப்போது நினைவுக்கு வந்து விட்டது!'' என்று வனிதாவைப் பற்றிப் பெருமையோடு தன் மனைவியிடம் கூறியவர்.''அது சரி... அன்று சங்கர்லால் நீ சோலோவாக வயலின் வாசிப்பாய் என்று பெருமையோடு அறிவித்தபோது, நீ ஏன் அப்படி ஏமாற்றி விட்டாய்?'' என்று கேட்டார் கோஸ்வாமி.வனிதாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. ''அன்றைய சூழ்நிலை அப்படி, அதை நான் விளக்க முடியாத நிலையில் இருந்தேன்!'' என்றாள் வனிதா அடைப்பட்ட குரலில்.கோஸ்வாமி அவளையே ஒரு நிமிடம் மவுனமாகப் பார்த்தார். பிறகு கூறினார்.-தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !