யார் இவர்?
அப்போது கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் சரித்திரப் பேராசிரியராக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவர் பெயர் சி.எப்.ஓட்டன் என்பது. அவர் எப்போதும் இந்தியர்களைப் பற்றி இழிவாகவே பேசுவார். ஒருநாள், பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, அவர் வங்காளிகளைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசிவிட்டார்.'சார், இந்த மாதிரிப் பேசுவது அழகல்ல, எங்கள் மனதைப் புண்படுத்தாதீர்கள்' என்று அவரிடம் மாணவர்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அவர் மாணவர்களின் பேச்சை மதிக்கவில்லை. திரும்பத் திரும்ப வங்காளிகளைக் கேவலப்படுத்தியே பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சைக் கேட்கக் கேட்க மாணவர்களின் உள்ளம் கொதித்தது. ஆத்திரம் கொண்டனர். கட்டுப் பாடாக எல்லாரும் வகுப்பை விட்டு வெளியேறிவிட்டனர்.மாணவர்களின் கிளர்ச்சியைக் கண்டு ஓட்டன் திடுக்கிட்டார். கல்லூரி அதிகாரிகள் திகைத்தனர்; கடைசியில், இந்தக் கிளர்ச்சியை ஆரம்பித்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் யார், யார் என்று கண்டுபிடித்தனர். அவர்களுக்கு உடனே அபராதம் விதிக்கவில்லை அல்லது சில நாட்களுக்கு அவர்கள் கல்லூரியில் கால் எடுத்து வைக்கக் கூடாது என்றும் உத்தரவு போடவில்லை. வேறு என்ன செய்தனர்? அவர்களை அந்தக் கல்லூரியை விட்டே நீக்கிவிட்டனர். அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு வேறு எந்தக் கல்லூரியிலுமே அவர்கள் சேர முடியாதபடி செய்து விட்டனர். அப்படி நீக்கப்பட்ட மாணவர்களில் நமக்கு தெரிந்த புரட்சி வீரன் ஒருவர் இருந்தார். 'கல்லூரியை விட்டு நம்மை நீக்கி விட்டார்களே...' என்று அவன் கவலைப் படவில்லை.'மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் திரும்பவும் கல்லூரியில் சேர்த்துக் கொள்வர்' என்று சிலர் அவனிடம் கூறினர்.ஆனால், அவன் அதற்கு தயாராக இல்லை.''ஒரு வெள்ளைக்காரர் நம் நாட்டவரைப் பற்றிக் கேவலமாக நம்மிடம் பேசுகிறார். அதைக் கேட்டுக் கொண்டு மரக்கட்டை மாதிரி நாம் சும்மா இருப்பதா? அவரது போக்கைக் கண்டிக்கவே நாங்கள் கிளர்ச்சி செய்தோம். நாங்கள் செய்ததில் தவறு இல்லை' என்றான் அந்த இளைஞன்.அத்துடன் அவன் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டுச் சும்மா இருக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் சென்றபிறகு, திரும்பவும் கல்லூரியில் சேர்ந்தான். அக்கறையுடன் படித்தான். பி.ஏ., வகுப்பில் தேறினான். பிறகு இங்கிலாந்து சென்றான். ஐ.ஸி.எஸ்., படித்தான். அதிலும் தேறி விட்டான். ஐ.ஸி.எஸ்., பட்டம் பெற்றபோது, அவனுக்கு வயது இருபத்து மூன்றுதான்!'ஐ.ஸி.எஸ் படித்தவர்' என்றாலே, 'ஆண்டவனுக்கு அடுத்தவர்' என்று நினைக்கும் காலம் அது! ஆனால், அந்த இளைஞன் பணத்தைப் பற்றியோ, பதவியைப் பற்றியோ கவலைப்படவில்லை. பம்பாய் வந்து இறங்கியதும், உடனே விடுதலைப் போரில் குதித்து விட்டான்! பலமுறை சிறை சென்றான். பலமுறை நாடு கடத்தப்பட்டான்; வாழ்நாள் முழுவதும் தேசத்துக்காகவே அர்ப்பணம் செய்தான். அவனது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. அவர் இறந்துவிட்டார் என்று ஒரு சிலரும், இன்னும் இறக்கவில்லை, எங்கோ உயிரோடுதான் இருக்கிறார் என்று சிலரும் சொல்கின்றனர். விடை : அந்த இளைஞன் 'ஜெய்ஹிந்த்' என்னும் மந்திரத்தைத் திக்கெல்லாம் முழங்கச் செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!