அந்துமணி பதில்கள்!
ஆர். கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம்: வாழ்வு தேடி, சென்னைக்கு வர என்னென்ன தகுதிகள் வேண்டும்?ஒரு தகுதியும் வேண்டாம். ஆனால், அந்தக் கனவை துாக்கி எறியுங்கள். தொல்லை பிடித்த நகரில் வாழ்க்கை தேவையா? எஸ். டேனியல் ஜூலியட், கோவை: கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கும், 'பரோல்' அவசியமா?சாதாரண இந்திய குடிமகனாக இருக்கும் நான், இதுபற்றி நினைக்கும்போது, அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், 'நீதி அரசர்'களுக்கு தான் இது பற்றி தெரியும்.ம. வேல்முருகன், புதுச்சேரி:லஞ்சம், ஊழல் இல்லா அரசு அதிகாரிகள் வருவது சாத்தியமா?மத்திய அரசின், புதிய, திடீர் நடவடிக்கைகள் அதற்கான வாய்ப்புகளை கொண்டு வந்து கொண்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்!எல். சுரேஷ், மதுரை: அவசியம் இல்லாமல், உங்களை பார்த்து, தொந்தரவு தருபவர்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?'சங்கர் பிரின்டிங் பிரஸ்' எனக்கு கை கொடுத்து விட்டது! அந்த அச்சகத்தில், 'நன்கொடை ரசீது' புத்தகம் ஒன்றை தயாரித்து வைத்துள்ளேன்... இப்படி வருபவர்களிடம், அதை நீட்டுவேன்! திரும்ப வருவரா என்ன...பி. கவிதா, சிதம்பரம்: பல பெயர்களில் அவதாரம் எடுக்கும் வாசகர்கள் பற்றி...அவர்களின் கையெழுத்து, எனக்கு தெரியாதா? சமீபத்தில், மதுரை வாசகர் ஒருவர், என்னை குறை சொல்லி மாட்டிக் கொண்டார்... அதாவது, அவர் கேள்விகளை, நான் தவிர்க்கிறேன் என்று! பதில் கடிதம், தபாலில் அனுப்பினேன். அது, அவருக்கு கிடைத்த உடனே, 'இ - மெயிலில்' மன்னிப்பு கடிதம் வந்து விட்டது!* ஆர். சேஷாத்திரி, சென்னை: உங்கள் பத்திரிகையை, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரும் திட்டுகின்றனரே...அதனாலென்ன... வாசகர்கள், நம் நாளிதழை தலையில் வைத்து கொண்டாடுகின்றனரே... அது தானே தேவை. அவர்களுக்காகத் தானே, 'தினமலர்!'டே. கிருபாதேவி, கோவை:'ஈ.வெ.ரா., வழியில் வந்தவன் நான்... ஆயுள் தண்டனை என்றாலும், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்...' என்கிறாரே, ம.தி.மு.க., தலைவர், வைகோ...மக்களும், அவரது நிலையிலேயே இருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு விட்டாரே... பேஷ்... பேஷ்...!* எஸ். செந்தில் பாலாஜி, மதுரை: நண்பன் ஒருவன், செல்வந்தனாக விரும்பி, என்னிடம் ஆலோசனை கேட்கிறான்... நீங்கள் பதில் சொல்லுங்களேன்!உங்கள் நண்பர், அறிவை முதலில் வளர்த்துக் கொள்ளட்டும். அப்போது, அவர் விரும்புவது, தானாகவே தேடி வரும்!