அந்துமணி பதில்கள்!
* ரா. ரெங்கசாமி, வடுகப்பட்டி, தேனி: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர், தினமும், அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பது ஏன்?தம் கட்சிகளும் இன்னும் அரசியலில் இருக்கிறது என்பதை, மக்களுக்கு நினைவுபடுத்தத் தான்!ம. நிவேதா, திருவிடச்சேரி, குடவாசல்: சிறுகதை எழுத ஆசை... 'டிப்ஸ்' ஏதாவது கூற முடியுமா?சிறுகதைகளின் முடிவை முதலில் யோசித்துக் கொள்ளுங்கள்... கதையில் நாலு கேரக்டர்களுக்கு மேல் வைத்துக் கொள்ளாதீர்கள்... சிறுகதை தேர்வாகி விடும்! ஜி. அசோகன், துாத்துக்குடி: அரசு அதிகாரிகளுக்கு உயர் பதவி கிடைக்கும்போது, அவர்கள் எதை நினைக்க வேண்டும்?உதாரணத்திற்கு, மரங்களை எடுத்துக் கொள்ளலாம். அசோக மரம், தென்னை மரம் இரண்டுமே உயரம் தான்! ஆனால், உபயோகத்தில்... தான் பதவி உயர்வு அடைவதை விட, மக்களுக்கு உபயோகமாக உயர்ந்திருப்பதாக கருத வேண்டும்!எம். கோவிந்தன், கடையநல்லுார்: சாப்பாட்டை நாமே உண்பது, பிறர் ஊட்டி உண்பது... எதில் சுகம் அதிகம்?இரண்டையும் தாண்டி ஒன்று உள்ளது... அது - அடுத்தவர்களுக்கு வயிறார ஊட்டி விடுவது!* கே. கதிர்வேல், பாளையங்கோட்டை: 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்' என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் இனிஷியலுக்கு விளக்கம் கொடுத்தது போல, அவரது மகன் உதயநிதி, தன் இனிஷியலாக என்ன கொடுப்பார்?ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சி பொதுச்செயலராக விளங்கிய ஸ்டாலின் மீதான மதிப்பு காரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் மகனுக்கு பெயர் வைக்கும்போது, பின்னாளில், பேரன் உதயநிதிக்கு இப்படி ஒரு இனிஷியல் பிரச்னை வரும் என, கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்டாலினின் முழுப்பெயர் ஜோசப் விசாரியோனவிச் ஸ்டாலின் என்பதாகும்.இனி, விஷயத்திற்கு வருவோம்... உதயநிதி, தன் பெயருக்கு என்னதான் இனிஷியல் போடுகிறார் என்பதை அறிய, அவரது தேர்தல் பிரமாண பத்திரத்தின் நகலைப் பார்த்தேன். அதில், S.Udhayanidhi என்று ஆங்கிலத்திலும், எஸ்.உதயநிதி என்று தமிழிலும் எழுதியுள்ளார்.இப்போது, ஓரளவு உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும்தானே!அ. மதியழகன், தென்காசி: நான் வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கிறேன். இதற்கு, மனைவியை அடக்கி வாழ வேண்டுமா, அடங்கி வாழ வேண்டுமா?இரண்டுமே இல்லை! 'ஐக்கியம்' என்று ஒன்று உள்ளது; அதுவே நன்று!